'ஸ்பிரிங் -சம்மர் - ஃபால் - விண்டர்', '3-அயர்ன்', 'அமேன்', 'பியட்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தென்கொரியாவைச் சேர்ந்த இயக்குநர் கிம் கி டுக். 59 வயதான இவர், சிறந்த இயக்குநருக்கான சில்வர் லையன், கோல்டன் லையன், சில்வர் பியர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக லாத்வியா நாட்டுக்கு சென்ற அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 11) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருடைய மறைவு உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல திரைபிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹசான் இன்று (டிசம்பர் 12) தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகத் தரமான திரைப்படங்களை ஈந்து சினிமா ரசனையை மேம்படுத்திய திரை மேதை கிம் கி டுக் மரணம் பெரும் இழப்பு. மாமேதைக்கு அஞ்சலி" என தெரிவித்துள்ளார்.
அதே போல் மற்றொரு ட்வீட்டில் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கும் பத்திரிக்கைகள் சங்கத்துக்கு ஆதரவாக, "அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.