ETV Bharat / city

அகம்பாவம் குறைய வேண்டிய இடங்களாக கோயில்கள் இருக்க வேண்டும்... சென்னை உயர் நீதிமன்றம்...

author img

By

Published : Aug 28, 2022, 11:34 AM IST

Etv Bharatஅகம்பாவம் குறைய வேண்டிய இடங்களாக கோயில்கள் இருக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
Etv Bharatஅகம்பாவம் குறைய வேண்டிய இடங்களாக கோயில்கள் இருக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

இரு தரப்புக்கு இடையேயான அகம்பாவம் மற்றும் மோதலை குறைக்கும் இடமாக இருக்க வேண்டிய கோவில்களில், இவை மேலோங்குவதால் கடவுள் பின்னுக்கு தள்ளப்படுகிறார் என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை அடுத்த குல்லூரில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன், கருப்பராயன், கன்னிமார் மற்றும் குடும்ப தெய்வங்கள் கோயிலில் வழிபாடு நடத்த தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி எம். சேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு தொடரப்பட்டது.

இறுதி தீர்ப்புக்காக நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று(ஆகஸ்ட் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஒவ்வொரு முறை விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்போது மனுதாரர் சேகர் தரப்பிற்கும், சாமிநாதன் மற்றும் ஜெகன்நாதன் தரப்பிற்கு தகராறு ஏற்படுகிறது. கடந்த மே மாதம் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடந்த ஜூன் 18ஆம் தேதி இரவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது.

அப்போதும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், ஈரோடு வட்டாட்சியர் முன்னிலையில் கோயில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி கூறுகையில், கோயில் வழிபாட்டில் இரு தரப்புக்கும் சுமூக உடன்பாடு ஏற்படுவதாக தெரியவில்லை. வருவாய் மற்றும் காவல் துறை ஆகியவற்றின் ஆற்றலை வீணடிக்க விரும்பவில்லை.

கடவுள் நம்பிக்கையாளர்கள் அமைதியை தேடி வரும் இடமாக கோயில்கள் உள்ளன. மனிதர்களையும் கடவுள்களையும் இணைக்கும் இடமாக வடிவமைக்கப்பட்ட கோயில்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இடமாக மாறிவிட்டது. கோயில்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிட்டது.

இரு தரப்புக்கும் இடையேயான அகம்பாவம் மற்றும் மோதலை குறைக்கும் இடமாக கோயில்கள் இருக்க வேண்டும். ஆனால் அகம்பாவம் மற்றும் மோதல் அதிகரிப்பதால், கடவுள் நம்பிக்கையே பின்னுக்கு தள்ளப்படுகிறது

இருப்பினும் அமைதியை நிலைநாட்ட கோயிலை மூடுவது என்பது முரண்பாடானது. ஆகவே இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை அந்த கோயிலுக்கான தக்காரை 10 நாட்களில் நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் தக்கார் கோயிலை திறந்து, பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது ஈரோடு மாவட்ட எஸ்.பி. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீதிமன்றங்களில் இப்போது உண்மையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் பி.என்.பிரகாஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.