ETV Bharat / city

போதையில் தகராறு: மனைவியைக் கத்தியால் குத்தியவர் கைது

author img

By

Published : Sep 4, 2021, 11:46 AM IST

போதையில் இருந்த தம்பதிக்கு இடையே தகராறு
போதையில் இருந்த தம்பதிக்கு இடையே தகராறு

சென்னையில் குடிபோதையில் இருந்த தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

சென்னை: கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜ் குடியிருப்பில் வசித்துவருபவர் சர்மிளா (32). இவரது தந்தை கிருஷ்ணன், சென்னை காவல் துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சர்மிளா சென்னை விமான நிலையத்தில் சரக்குப் பிரிவில் (cargo) சுங்கத் துறை துணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் செல்வமுத்துகுமரன் டி.சி.எஸ். என்ற தனியார் நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றிவருகின்றார். இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

கத்திக்குத்தில் முடிந்த தகராறு

இந்நிலையில் நள்ளிரவு 1.15 மணிக்கு கணவன், மனைவி இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, சர்மிளா மதுரையில் நடைபெறவுள்ள தனது உறவினர் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என செல்வமுத்துகுமாரனிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துக் கண்டித்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த சர்மிளா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே குத்திக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மதுபோதையில் இருந்த செல்வமுத்துகுமரனும் ஆத்திரத்தில் சர்மிளா கையில் இருந்த கத்தியைப் பிடுங்கி அவரது மார்பு, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சர்மிளா வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு காவல் துறையினர், செல்வமுத்துகுமரனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: நண்பனை கொடூரமாக தாக்கிய இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.