ETV Bharat / city

ரிப்பன் மாளிகையில் மீண்டும் ஏறியது மேயர் கொடி

author img

By

Published : Mar 4, 2022, 10:19 PM IST

history of chennai corporation flag
ரிப்பன் மாளிகை

கடந்த ஆறு ஆண்டுகளாக சென்னை மேயராக யாரும் இல்லாத காரணத்தினால் ரிப்பன் மாளிகையின் மேல் கொடி ஏற்றப்படாமல் இருந்தது. இன்று (மார்ச் 4) காலை மேயர் பொறுப்பேற்ற பிறகு, தற்போது மீண்டும் ரிப்பன் மாளிகையில் மேயர் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியை பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்று கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 4) நடைபெற்ற மறைமுக தேர்தலில் பிரியா ராஜன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், மேயராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அவருக்கு அரசு சார்பில் சென்னை பெருநகர கட்சி பெயர் கொடி மற்றும் இலட்சினை பொருந்திய நான்கு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர மேயரின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகர மேயர் கொடி ஏற்றப்பட்டது.

கொடியின் வரலாறு

கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படாத சூழ்நிலையில், சென்னையின் சிறப்பு அலுவலராக ககன்தீப் சிங் பேடி நிர்வகித்து வருகிறார். இதன் காரணமாக, தேசியக்கொடி மட்டுமே பறக்கவிடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு மேயர் பொறுப்பை ஏற்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், நீல நிறத்திலான சென்னை மாநகராட்சியின் இலட்சினை பொருந்திய மேயர் கொடி ரிப்பன் மலையின் உச்சியில் தேசியக் கொடியுடன் சேர்த்து பறக்க விடப்பட்டுள்ளது.

இந்த கொடியை பறக்க செய்வதற்கு பின்னால் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கதை இருப்பதாக தெரிவிக்கின்றனர் சென்னை மாநகராட்சி அலுவலர்கள். அந்த வழக்கத்தின்படி, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்த காலத்தில் அந்தந்த மாகாண மேயர்கள் தங்களது தலைமை இடங்களில் இருக்கின்றனர் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவாக அவர்களது முகாம் அலுவலகங்களில் கொடி ஏற்றுவது வழக்கம்.

அந்தக் கொடி, அலுவலகங்களில் ஏற்றப்பட்டிருந்தால் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளையும் மனுக்களையும் நேரடியாக மேயரை சந்தித்து வழங்குவார்கள். அதே வழக்கம் இன்று வரையிலும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பின்பற்றப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகர மேயர் சென்னையை விட்டு வெளியே சென்று இருந்தால் இந்த கொடி கீழே இறக்கப்படும் என்றும் சென்னை எல்லைக்குட்பட்ட இடங்களில் சென்னை மேயர் இருந்தால் மட்டுமே ரிப்பன் மாளிகையில் இந்த கொடி பறக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களைக் கைப்பற்றுவதா? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.