ETV Bharat / city

அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Jul 20, 2022, 2:43 PM IST

Updated : Jul 20, 2022, 3:29 PM IST

அதிமுக அலுவலகம் ஈபிஎஸ் தரப்புக்கு சொந்தம்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக அலுவலகம் ஈபிஎஸ் தரப்புக்கு சொந்தம்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சீல் வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தின் சாவியை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்க வருவாய் கோட்டாட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அரசு தரப்பு வாதம்: வழக்கு விசாரணையின் போது, தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை, வழக்கு நிலுவையில் இருந்தாலும் சீல் வைக்க முடியாது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை, மீண்டும் பிரச்சனை ஏற்படாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கருதி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக் கூடாது, சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அலுவலரோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என தெரிவித்தனர்.

ஈபிஎஸ் தரப்பு: எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், சம்பவ இடத்தில் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு வீரர்களை தவிர வேறு எந்த காவலர்களும் இல்லை, என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது. கட்சி அலுவலகம் அவருக்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்?,சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை பன்னீர்செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டனர்.

ஓபிஎஸ் தரப்பு: இதற்கு பன்னீர்செல்வம் தரப்பில், கட்சியில் தனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது , பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாக கருத முடியாது.

கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும். கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது. இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதால், அதுவரை அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம்.

பொதுக்குழு நடக்கும் போது மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவார்கள் என்பதால், கட்சி அலுவலகத்தை பூட்டி வைக்கும் பழக்கம் இல்லை, அதன்படி தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றதாகவும், ஆனால் பழனிச்சாமி தரப்பில் நான்கு மாவட்ட செயலாளர்கள் வெளியில் அமர்ந்து கொண்டு உள்ளே நுழைவதை தடுத்ததாகவும், கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை. பொதுக்குழுவுக்கு அனுமதியளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

நீதிபதி உத்தரவு: பின்னர் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து(ஜூலை 15) வழக்கின் உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் இன்று(ஜூலை 20) தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார், அதிமுக அலுவலகத்தின் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ்-யிடம் வருவாய் கோட்டாட்சியர் வழங்க வேண்டும்.

மேலும், மோதல்களை தடுக்கும் விதமாக இருதரப்பு ஆதரவாளர்களும் 1 மாதத்திற்கு கட்சி அலுவலகத்திற்கு நுழைய தடை விதித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் விதமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்...

Last Updated :Jul 20, 2022, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.