சென்னை தாம்பரம் மாநகராட்சியில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைக் கிடங்குகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது மாடம்பாக்கம் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையாவை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதில் குடியிருப்புப் பகுதியின் நடுவே குப்பைக் கிடங்கு இருப்பதால் கலப்படமான குடிநீர் வருவதாகவும், தொடர்ந்து குழந்தைகள், முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், இது குறித்து பலமுறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
அப்போது பதிலளித்த பொன்னையா, 'ஒரே மாதத்தில் குப்பைக் கிடங்கினை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர். பின்னர் செய்தியாளருக்குப் பேட்டியளித்த பொன்னையா கூறுகையில்,
"தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பேரூராட்சிப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்த பேரூராட்சிப் பகுதிகளில் லாரிகள் பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.