ETV Bharat / city

சென்னையில் போலி வணிக வரித்துறை அதிகாரி கைது

author img

By

Published : Jul 27, 2022, 4:55 PM IST

மோசடி
மோசடி

சென்னையில் 4 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் பறிக்க முயன்ற போலி வணிக வரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை: அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் நேரு. இவர் கொளத்தூர் ஐயப்பா நகரில் பாக்கியலட்சுமி அக்ரோ புரோடக்ட்ஸ் என்ற பெயரில் உணவு பொருள் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த 20 ஆம் தேதி நேருவை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், வணிக வரித்துறையில் துணை ஆணையராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் நிறுவனம் 4 கோடி ரூபாய் வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், 25 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றுவதாக நேருவிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நேரு, ரூ.25 லட்சம் கொடுக்க முடியாது ரூ.10 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டு நேரில் பெற்று கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனிடையே நேருவிற்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், எந்த வித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் ரூ.10 லட்சத்தை தியாகராய நகர் ராஜாசார் தெருவிற்கு கொண்டு வருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் நேற்று முன்தினம் (ஜூலை 25) நேரு, ராஜாசார் தெருவிற்கு சென்று, அந்த நபரிடம் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை வாங்கி விசாரித்தபோது போலியான ஆவணங்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சூதாரித்த நேரு, உடனடியாக அவரது நண்பர்களுடன் இணைந்து அவரைப் பிடித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் நேரு அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், தியாகராய நகர் லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேலு (46) என்பதும் இவர் சைதாப்பேட்டை வணிக வரித்துறை அலுவலகத்தில் இணை ஆணையர் ஒருவரிடம் கார் ஓட்டுனராக பணியாற்றுவதும் தெரியவந்தது. மேலும் இணை ஆணையரை காரில் அழைத்து செல்லும்போது, செல்போன் உரையாடலை கவனித்து, பிரபல தனியார் ஆக்ரோ பிராடக்ட்ஸ் நிறுவனத்தில் பணப்பறிப்பில் ஈடுபட வேலு திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக போலி ஆவணங்களை தயார் செய்த வேலு அந்நிறுவனத்தின் உரிமையாளர் நேருவை மிரட்டி ரூ.10 லட்சம் பணப்பறிப்பில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து வேலுவை கைது செய்த போலீசார் அவர் மீது மோசடி, பொய்யான ஆவணத்தை புனைதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் வேலுவுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவர்கள் யார்? இதேப்போல அவர்கள் வேறு யாரிடமாவது கைவரிசை காட்டி உள்ளனரவா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "படிப்பு செலவுக்காக கஷ்டப்படுத்திட்டேன்" - பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.