ETV Bharat / city

சிறுமியிடம் சினை முட்டை பெற்ற விவகாரம்: விரைவில் 4 மருத்துவமனைகள் மூடல்!

author img

By

Published : Jul 14, 2022, 4:55 PM IST

Updated : Jul 14, 2022, 5:47 PM IST

சிறுமியிடம் சினை முட்டை பெற்ற விவகாரம்
சிறுமியிடம் சினை முட்டை பெற்ற விவகாரம்

சிறுமியிடம் சினை முட்டை பெற்ற விவகாரத்தில், கருத்தரிப்பு மையங்களுக்கு தமிழ்நாடு மருத்துவமனைகள் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மருத்துவமனைகள் மூடப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "செயற்கை கருத்தரித்தல் மையங்கள் சிறுமியிடம் இருந்து சினைமுட்டையை வணிகரீதியில் பெற்று விற்பனை செய்தது குறித்து, ஜூன் 3ஆம் தேதி நாளிதழ்களில் செய்தி வெளியானது.

அதன் நீட்சியாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் சினைமுட்டையினை ஈரோடு, சேலம், ஓசூர் பகுதிகளில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு வணிகரீதியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக செய்தி வெளியானது.

அதனைத்தொடர்ந்து இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையில் 5 நபர்களைக்கொண்ட உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணைக்குழு ஜூன் 5ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டது.

சிறுமியிடம் சினை முட்டை பெற்ற விவகாரம்

விசாரணையின் அடிப்படையில், ஈரோடு சுதா மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் விசாரணை செய்யப்பட்டது.

ஆந்திரா மாநிலம், திருப்பதியில் உள்ள Mathrutva Test Tube Baby Centre மருத்துவமனை மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஶ்ரீகிருஷ்ணா மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு விசாரணை அழைப்பாணை அனுப்பப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நால்வரிடமும் சிறையில் சென்று விசாரணை மேற்கொள்ள ஈரோடு மகிளா நீதி மன்றத்தில் ஜூன் 23ஆம் தேதி அன்று அனுமதி கோரப்பட்டது. ஜூலை 4ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் சிறையில் சென்று விசாரணைக்குழுவால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி விசாரணை அலுவலரின் இறுதி அறிக்கை ஜூலை 7ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த விசாரணை மற்றும் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் மேலும் ஆவணங்களை ஆய்வு செய்ததிலும் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. சினை முட்டை தானம் கொடுத்த சிறுமியின் உண்மையான வயது 16 என்றும், அவருடைய உண்மையான பெயர் மற்றும் வயது மறைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.

சினைமுட்டை தானத்திற்கு சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்ப்பந்தம் செய்தது தெரியவருகிறது. ஆதார் அட்டை போலியாக தயாரிக்கப்பட்டது என்று தெரிந்தும் இடைத்தரகர், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆறு மருத்துவமனைகள் அதனை தவறாகப்பயன்படுத்தியது தெரியவருகிறது.

விசாரணை அடிப்படையில், ஆறு மருத்துவமனைகள் முறையே ART சட்டம் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் மற்றும் PCPNDT Act சட்டப் பிரிவுகளில் மற்றும் தமிழ்நாடு மருத்துவமனைகள் செயல்படுத்துதல் சட்டம் ஆகிய சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை மீறி செயல்பட்டது தெரியவருகிறது.

மேலும் விசாரணையில், அடையாளத்திற்காக பெற்ற ஆதார் அட்டை ஒருபக்கம் மட்டுமே உள்ளது. மற்ற கொடையாளிகளிடம் பெறப்பட்ட ஆதார் அட்டை இருபக்கமும் உள்ளது. எனவே, போலியான ஆதார் என தெரிந்தே அதைப்பெற்றுள்ளனர். மருத்துவமனைகள் வணிக ரீதியாக சினை முட்டை தானம் கொடுப்பவர்களிடம் செயல்பட்டது தெரியவருகிறது. தகுந்த கல்வித்தகுதி இல்லாத ஆலோசகர் ஆலோசகராக செயல்பட்டது தெரியவருகிறது.

சினை முட்டையை எடுப்பதற்கு முன் சினைமுட்டை வழங்குபவருக்கு அதன் சாதகபாதகங்கள் முறையாக விளக்கப்படவில்லை. USG மெஷினில் ஸ்கேன் எடுத்ததற்கான ஒளி நிழற்படங்கள் சேமித்து வைக்கப்படவில்லை. விசாரணை அலுவலர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகளால் கொடுக்கப்படவில்லை. சிறுமியிடமிருந்து சினைமுட்டை பலமுறை எடுக்கப்பட்டுள்ளது. போலியான ஆதார் அட்டையினை சரி வர பரிசோதிக்காமல் சினைமுட்டை தானம் செய்தவரின் வயதை தவறாக குறிப்பிட்டுள்ளனர்.

சினை முட்டை தானம் செய்தவரின் கணவரின் ஒப்புதல் பெறப்படவில்லை, தவறாக வேறு ஒருவரிடம் பெற்றது ART சட்டத்தின்படி சினை முட்டை 21 வயதிலிருந்து 35 வரை வயதுள்ள ஒரு குழந்தை பெற்றுள்ள ஒரு நபரிடம் மட்டுமே வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே எடுக்க வழிவகை உள்ளது.

எனவே விசாரணை அறிக்கை அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள நான்கு மருத்துவமனைகள் மீது நீதிமன்றத்தில், இணை இயக்குநர்கள் சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகியோர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்படும். PCPNDT சட்டத்தின்கீழே மேற் கூறிய மருத்துவமனைகள் சட்டப்பிரிவுகளுக்கு எதிராக செயல்பட்டது நிரூபணமாகியுள்ளது.

எனவே, இம்மருத்துவமனைகளில் உள்ள scan சென்டர்கள் சட்டப்பிரிவுகளை மீறி செயல்பட்டுள்ளதால், உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சுதா மருத்துவமனை, ஈரோடு, விஜய் மருத்துவமனை, ஓசூர் ஆகிய மருத்துவமனைகள் தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளாக செயல்படுகின்றன.

விசாரணை அறிக்கை அடிப்படையில் இந்த இரு மருத்துவமனைகளும் இத்திட்டத்திலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆணையின்படி சம்பந்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். சட்டப்பிரிவுகளின்படி, சினை முட்டை தானம் குறித்து மருத்துவமனைகள் பராமரிக்க விரிவான வேண்டிய நெறிமுறைகள் மருத்துவப்பணிகள் சேவை இயக்குநரால் வெளியிடப்பட்டுள்ளது.

TNCEA Act, மூலமாக முறைகேடாக மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவமனை மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதவிர, காவல் துறை வாயிலாக POCSO மற்றும் ஆதார் சட்டம் மூலமாக வழக்கு பதியப்பட்டு, தனியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று தற்பொழுது அதிகரித்தது குறைந்து வருகிறது. மருத்துவமனைகளில் 5 விழுக்காடு பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 95 விழுக்காடு பேர் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

18 வயது முதல் 59 வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் என ஒன்றிய அரசிற்கு கோரிக்கை விடுத்தோம். அதனை ஏற்று ஜூலை 15 ஆம் தேதி முதல் இலவசமாக போடுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. 75 நாட்களுக்குள் போட வேண்டும் எனக் கூறியுள்ளதால், முகாம் மூலம் போடவும் திட்டமிட்டுள்ளோம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் நலமாக இருக்கிறார். லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது. விரைவில் குணம் அடைந்துவிடுவார். தமிழ்நாட்டில் சித்த மருத்துவப்பல்கலைக் கழகம் அமைப்பதற்கான அனுமதியை ஆளுநர் அளித்த உடன் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி!

Last Updated :Jul 14, 2022, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.