சொத்து அபகரிப்பு: துணை நடிகை மீது வயதான தம்பதி புகார்

author img

By

Published : Jun 1, 2022, 7:16 PM IST

மூதாட்டி பேட்டி

சென்னை மேற்கு மாம்பலத்தில் சொத்தை அபகரித்த துணை நடிகை மீது வயதான தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை: மேற்கு மாம்பலம் கணபதி தெருவில் வசித்து வருபவர்கள் மணி (71) - கஸ்தூரி (70) என்ற வயதான தம்பதியினர். இவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் கடந்த 1978ஆம் ஆண்டு மேற்கு மாம்பலத்தில் சுமார் 3,000 சதுர அடியில் சொந்தமாக குடியிருப்பு கட்டி வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். குடியிருப்பில் வாடகைக்கு விட்டு வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நகை செய்யும் தொழில் செய்து வந்த தனது கணவர் சமூக சேவைகள் செய்து வந்ததாகவும், அதன் மூலம் ருக்மணி என்ற துணை நடிகை பழக்கமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு ருக்மணி மசாஜ் பார்லர் நடத்தி வந்ததாகவும், தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவருடனான பழக்கத்தை கணவர் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மூதாட்டி பேட்டி

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மணி தான் தனது கணவர் எனக் கூறி கொண்டு போலி ஆவணங்களை வைத்து, வழக்கறிஞர் என்ற பெயரில் ரவுடிகளுடன் வீட்டிற்குள் ருக்மணி நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.

50 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் எனவும் இல்லையென்றால் பொய் வழக்கில் சிறையில் தள்ளி விடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிவித்துள்ளனர். இதற்கு அசோக்நகர் உதவி ஆணையராக இருந்த வின்செண்ட் ஜெயராஜ் மற்றும் ஆய்வாளர் சூரிய லிங்கம் உடந்தையாக செயல்பட்டு சொத்தை அபகரிக்க உதவியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தாங்கள் வசித்து வரும் குடியிருப்பு 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதாலும், இடியும் தருவாயில் இருக்கின்ற காரணத்தினால், இடிப்பதற்காக சென்னை மாநகராட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துணை நடிகை ரவுடிகள் மற்றும் காவல்துறை உதவியோடு சொத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, சட்ட விரோத செயல்களில் வீட்டிற்குள்ளேயே துணை நடிகை ருக்மணி ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சென்னை மாநகராட்சி கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டதால் வேறுவழியின்றி வாழ்வாதாரத்தை இழந்து வாடகை வீட்டில் சென்று தங்கியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அசோக் நகர் காவல் நிலையத்தில் துணை நடிகை ருக்மணி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த குமரேசன் ரவி ஆகியோர் மீது கடந்த ஆண்டு இறுதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் வயதான தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையில் தொடர்ந்து முறையிட்டு அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் உத்தரவின் பேரில் கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் துணை நடிகை மற்றும் கூட்டாளிகள் தொடர்ந்து மிரட்டிக்கொண்டு வெளியே செல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல்துறையின் உதவியுடன் கட்டடத்தை இடிக்க நீதிமன்ற அனுமதி பெற்றும், சென்னை மாநகராட்சியின் உத்தரவை செயல்படுத்த அனுமதிக்காமல் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணி உதவியுடன் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

தனக்கும் துணை நடிகைக்கும் சுமார் 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டு பேரம் பேசியதாகவும், வயதான தம்பதியினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இது போன்று பேரம் பேசி சுமார் 15 லட்சம் ரூபாய் அளவில் கொடுத்த பிறகும் தொடர்ந்து சொத்தை ஆக்கிரமித்துக் கொண்டு மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளனர். வயதான தம்பதியினர் என்பதையும் பார்க்காமல் தன்னிடம் பிரச்சனையில் ஈடுபட்டதும், அப்போது காவல்துறையினர் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் சிசிடிவி ஆதாரத்தையும் புகாருடன் சமர்ப்பித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தும், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள துணை நடிகை உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது சொத்துக்களை மீட்டு , தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

வயதான தம்பதியினரின் சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்த முன்னாள் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர் ஆகியவை சட்டவிரோதமாக செயல்படுவதற்கு லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கி அலுவலர் பேசுவதாக கூறி ஆசிரியரிடம் ரூ.3.24 லட்சம் மோசடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.