''போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு''; முதலமைச்சர் 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

author img

By

Published : Aug 11, 2022, 3:21 PM IST

Updated : Aug 11, 2022, 4:57 PM IST

முதலமைச்சர் தலைமையில் 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஏற்கப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.11) “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” தொடக்க விழாவில், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை காணொலி காட்சியில் இணைந்திருந்து ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழி: “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்” என்னும் இப்போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஏற்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், ஒரே நாளில் அதிகபட்ச நபர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்தமைக்காக World Records Union மற்றும் Asia Book of Records ஆகிய அமைப்புகள் முதலமைச்சரிடம் அதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

விழிப்புணர்வு பிரசாரம்: அதனைத்தொடர்ந்து, ​​போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகியவற்றை இணைத்து, புதிதாக “அமலாக்கப் பணியகம் – குற்றப்புலனாய்வு துறை”யை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் தலைமையில் 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
முதலமைச்சர் தலைமையில் 30 லட்சம் மாணவர்கள் காணொலி காட்சி மூலம் உறுதிமொழி ஏற்பு

இந்தப் புதிய பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற அரசின் இலக்கை அடைய பெரும் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை ஒழிப்பு தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, தன்னார்வலர்கள் “அமலாக்கப்பணியகம் – குற்றப்புலனாய்வுத்துறை” இணையதளம் வாயிலாக பங்கேற்கும் 30 மணிநேர விழிப்புணர்வு பிரசாரத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு குறும்படம்: இதன்மூலம், தன்னார்வலர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாகவும் நேரடியாகவும் தொடர்ந்து 30 மணிநேரம் மேற்கொள்வார்கள்.

பின்னர், அமலாக்கப்பணியகம் – குற்றப்புலனாய்வு துறையினரால் தயாரிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார குறும்படத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் தலைமையில் 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
முதலமைச்சர் தலைமையில் 30 லட்சம் மாணவர்கள் காணொலி காட்சி மூலம் உறுதிமொழி ஏற்பு

போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் இவ்விழிப்புணர்வு குறும்படம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்காக திரையிடப்பட்டது. “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” தொடக்க விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி தர்மபுரியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக கலந்து கொண்டு போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து உரையாற்றினார்.

முதலமைச்சர் தலைமையில் 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
முதலமைச்சர் தலைமையில் 30 லட்சம் மாணவர்கள் காணொலி காட்சி மூலம் உறுதிமொழி ஏற்பு

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தென்காசியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி

Last Updated :Aug 11, 2022, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.