திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் பேரனும் திமுகவின் வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கலாநிதியின் மகனுமான சித்தார்த், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் சட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு நண்பர்களுடன் காரில் சென்னை எழும்பூர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எழும்பூர் பாந்தியன் சாலையில் சென்ற போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலன் மீது கார் மோதியது.
இதில் உதவி ஆய்வாளர் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சித்தார்த்தின் காரை பறிமுதல் செய்து, அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலையத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.