ETV Bharat / city

‘தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க வேண்டும்’

author img

By

Published : Sep 30, 2021, 3:23 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் ஏதும் இல்லாமல், தேர்தல் நடத்துவதில் மற்ற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பரப்புரை முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை காணொலி பதிவுசெய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப்பட்டுவாடாவைத் தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து மனு அளித்திருந்தார்.

இந்த மனுவைப் பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவுத் துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியிருந்தார்.

தேர்தலின்போது பின்பற்றக்கூடிய நடைமுறைகள்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, எதிர்க்கட்சியின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து முடிவை தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (செப். 30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் தொடர்ச்சிதான் இது எனவும், கடந்த தேர்தலின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்தத் தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் நேரடி வெப் காஸ்டிங் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றில் ஒரு வாக்குச்சாவடியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் வாக்குப் பெட்டிகளை, ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டுசெல்வதையும் அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுசெல்வதையும் காணொலி பதிவுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க வேண்டும்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்குப் பாதுகாப்புப் போட வேண்டும் என்றும், இந்த அம்சங்கள் பற்றி மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, “தேர்தல் நடத்துவதில் மற்ற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்தப் புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்படுவது அவசியம். கிராமங்களில் காணொலி பதிவு அவசியம்” எனக் குறிப்பிட்டார்.

ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால் என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அலுவலர்களுடன் கலந்து பேசி நாளை (அக்டோபர் 1) பதிலளிக்க தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல் - மது விற்பனைக்குத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.