ETV Bharat / city

கூடுதல் நிதி ஒதுக்க நிர்மலா சீதாராமனை வலியுறுத்திய ஓபிஎஸ்

author img

By

Published : Jan 18, 2021, 7:40 PM IST

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

மெட்ரோ ரயில் திட்டம், குடிநீர் திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் போன்ற மத்திய மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார்.

மக்களவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், மூன்றாவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த நிலையில், மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் நிதி குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

அவர், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி சீரான முறையில் இருந்து வருவதாகவும், 15 வது நிதிக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் 2 ஆயிரத்து 577 கோடி ரூபாய் தற்போது வரை விடுவிக்கபடாமல் உள்ளதாகவும், அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகள் வளர்ச்சிக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், நீர் பற்றாக்குறையைப் போக்க தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

விவசாயம் மற்றும் மீன் வளத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும், சென்னையில் செயல்படுத்தபட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய மாநில அரசுகள் 50:50 நிதி பங்கீட்டில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியினை ரூ. 4 லட்சமாக அதிகரிக்கவும், முதியோர் ஓய்வூதியத்துக்கான தொகையை அதிகரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையும் படிங்க: மெரினாவில் ஸ்மார்ட் கடைகள், குலுக்கல் மூலம் விண்ணப்பங்கள் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.