ETV Bharat / city

ஹெல்மெட் அணியாமல் ஒருமையில் பேசிய காவலர் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்

author img

By

Published : Oct 9, 2022, 10:47 AM IST

Etv Bharat
Etv Bharat

தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலரை வைத்து தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு செய்து காவல்துறை வீடியோ பதிவிட வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை: நியூ அவடி சாலையில் ஹெல்மெட் அணியாமல் காவலர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றதால், அவரை ஹெல்மெட் அணியுமாறு வலியுறுத்திய சமூக ஆர்வலரிடம், காவலர் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வீடியோவில், காவலர் தகாத வார்த்தைகள் பேசி சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுதெரியவந்துள்ளது.

அந்த காவலர் மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கிருஷ்ணகுமார் என்பதும், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக காவலர் கிருஷ்ணகுமாருக்கு அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் காசிமாயன் நேற்று (அக்.8) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை வேண்டி புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தான் அக்டோபர் 7ஆம் தேதி நியூ ஆவடி சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவ்வழியே ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசியபடி, சென்ற காவலர் ஒருவரைக் கண்டு, அவரிடம் ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு நல்லெண்ணத்தில் கூறினேன். அப்போது, அவர் தம்மைத் தகாத வார்த்தைகள் பேசி திட்டிய காவலர் அங்கிருந்து சென்றுவிட பாதுகாப்பு கருதிதான் செல்போனில் வீடியோவை ஆன் செய்தபடி இருசக்கர வாகனத்தில் மீண்டும் அண்ணா நகர் ஆர்.டி.ஓ அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, வழியில் அந்த காவலர் தன்னை வழிமறித்து 'நான் ஹெல்மெட் அணியாமல் போவதில் உனக்கு ஏதாவது பிரச்னையா?' என வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளில் திட்டினார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..

பின்னர் அந்த காவலரின் வீடியோவை வைத்து அவரது பெயர் கிருஷ்ணகுமார் என்பதை அறிந்துகொண்டு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் ஊடகத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அளித்தேன்’ என அவர் கூறினார்.

இந்நிலையில், தான் வெளியிட்ட வீடியோ 2 மாதங்களுக்கு முன்புள்ளது எனவும்; நேற்று தேவையில்லாமல் அந்த வீடியோ வைரலாகியதாக காவல்துறை விளக்கமளித்ததாகவும்; தனியார் நாளிதழியில் செய்தி வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தான் நேரடியாக வந்து எழுத்துப்பூர்வமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நல்லெண்ணத்துடன் ஹெல்மெட் அணியச் சொன்னதை உணராமல், தன்னை பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டிய காவலர் கிருஷ்ணகுமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், காவல்துறை மக்களின் நண்பன் என்ற வாசகத்திற்கு ஏற்ப பொதுமக்களிடம் எப்படி கண்ணியமாக நடந்துகொள்வது குறித்து உயர் அலுவலர்கள் காவல்துறையினருக்கு கற்றுத்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்கள் தவறு செய்தால் அவர்களை வைத்து விழிப்புணர்வு செய்வதுபோல், தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர் கிருஷ்ணகுமாரை வைத்தும் தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி காவல்துறை வீடியோ பதிவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

காவலர் கிருஷ்ணகுமார் கடந்த ஜூலை மாதம் போரூர் சுங்கச் சாவடி அருகே காரில் பேசிக்கொண்டிருந்த ஜோடிகளை மிரட்டி, பின் அங்கிருந்த இளம் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி, அவரை இரவு நேரத்தில் தொடர்புகொண்டு தகாத முறையில் பேசியதாக சர்ச்சையில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகளை வைத்திருந்த கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் கிருஷ்ணகுமார் ஓய்வறையில் மற்றொரு காவலருடன் குடிபோதையில் தகாத வார்த்தைகள் பேசி தாக்கிக்கொண்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "உனக்கென்னடா பிரச்னை" - ஹெல்மெட் அணியவில்லை என கேட்டவரிடம் வாக்குவாதம் செய்த காவலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.