மகாராஷ்டிராவில் இருந்து பழங்கள், காய்கறிகள் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறி லாரியின் பதிவு எண்ணுடன் கோயம்பேட்டில் பணிபுரியும் நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், கோயம்பேடு மார்க்கெட் பார்க்கிங்கில் வைத்து ஓட்டுநர், உதவியாளர் இருவரையும் பிடித்துள்ளனர். பின்னர், அவர்களை பரிசோதனை செய்ய மருத்துவர்களை அழைத்து வந்தனர். அவர்களுக்கு கரோனா தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது.
மேலும், அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஸ்பாக் சமாதார்(36) அபு பக்கர்(33) என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின், தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை பெற்று கொண்ட காவல் துறையினர் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக, கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.