கரோனோ தொற்று காரணமாக, நாடு முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் தன்னலம் பாராமல் உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர், காவல்துறையினர், ஊடகத்துறையினர்களை பாராட்டும் விதமாக இன்று மாலை 5 மணி அளவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தெருக்களிலும் ஒன்றுகூடி கைகளைத் தட்டி தங்கள் ஆதரவையும் பாராட்டையும் அவர்களுக்கு தெரிவித்தனர்.
இதே போன்று சினிமா துறை சார்ந்த பலரும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக கைகளைத் தட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகை தேவயானி , நடிகர்கள் பிரபு, மகத், சதீஷ், ரியோ ராஜ், இயக்குனர் ஆர் வி உதயகுமார், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பவன்கல்யாண், நாகார்ஜுனா, ஜூனியர் என்டிஆர் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த அக்ஷய்குமார், விவேக், ஓபராய் ரன்வீர்சிங் ஆகியோரும் தங்கள் ஆதரவைத் மருத்துவர்களுக்கும் செவிலியர்க்கும் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று தருமபுரி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு அலுவலர்கள், வீரர்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி, “மாவட்டத்தில் பொதுமக்கள் தானாக முன்வந்து முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இன்று மாலை 5 மணிக்கு தடுப்பு நடவடிக்கையில் அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பூங்காவில் சைரன் ஒலிக்கப்பட்டது." என்றார்.
மேலும், "பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக இருந்து கைதட்டி நன்றியை தெரிவித்தனர். தருமபுரி மாவட்டத்தில் ஒருவர் கூட கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கை கழுவுதல் முறை அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கில் அமைதியாக அரங்கேறிய திருமண நிகழ்வுகள்