கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் - மெட்ரோ ரயில்வே இயக்குநர் தகவல்!

author img

By

Published : Aug 3, 2022, 7:13 PM IST

மெட்ரோ ரயில்வே

மெட்ரோ ரயில் பயணிகள் 5 கிளிக்கில் கியூஆர் குறியீடு (Qr Code) மூலம் டிக்கெட் பெற முடியும் என மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு வரிசையில் நிற்காமல் கியூஆர் குறியீடு (Qr Code) மூலம் பயணச்சீட்டை பெறக்கூடிய நடைமுறையை இன்று (ஆக.3) கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்சந்திந்த மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் சித்திக், "இனிமேல் மெட்ரோ ரயிலில் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெற முடியும். இதில் 20% டிக்கெட் கட்டண தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் போக 40 ரூபாய் இருக்கும் கட்டணத்தில் கியூ ஆர் கோடு மூலம் 32 ரூபாய்க்கு டிக்கெட் பெறமுடியும்.

கியூஆர் கோடு மெட்ரோ ரயில் நிலையத்தைச்சுற்றியும், வாகன நிறுத்துமிடம் உள்ள பல்வேறு இடங்களில் இடம்பெறும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 கிளிக்கில் டிக்கெட் பெற முடியும். இருக்கும் பயணிகளைத் தக்க வைக்கவும், புதிய பயணிகளை வர வைக்கவும் இந்த ஏற்பாடு. இது ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் இடம்பெறும். இது முழுக்க முழுக்க 100% பாதுகாப்பான வழிமுறையாகும்.

2ஆவது கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக அடையாறு ஆற்றில் மண் பரிசோதனை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுரங்கம் அமைக்கும்போது அருகில் இருக்கும் வீடுகள் தரமாக உள்ளதா? அதில் விரிசல் ஏற்படும் வகையில் உள்ளதா? இடியும் வகையில் உள்ளதா? என கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. இதில் பாதிப்பு வந்தால் அனைத்து வீடுகளையும் சரி செய்யும் பொறுப்பு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தைச் சார்ந்தது.

சீன நாட்டில் இருந்து சுரங்கம் அமைக்கும் ராட்சத போரிங் இயந்திரங்கள் தனித்தனி பாகங்களாக வந்துள்ளன. அதனைப் பொருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலம் எடுக்கும் பணி காரணமாக சில பணிகள் பாதிப்படைந்துள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையுடன் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்.

மெட்ரோ ரயில்வே அறிவிப்பு
மெட்ரோ ரயில்வே அறிவிப்பு

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய திட்டம். இந்த வழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 12 மெட்ரோ நிலையங்களை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மெட்ரோ ரயில் பணியில் சுரங்கம் அமைக்கும் பணி மிகப்பெரிய சவாலாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உயிரோடு இருப்பதைப்பதிவு செய்யப்போராடும் நபர் - 'காகஸ்' திரைப்படத்தை மிஞ்சும் 'நிஜ'சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.