சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Apr 5, 2022, 8:51 AM IST

நீதிமன்றம் கேள்வி

சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நின்னக்கரை ஏரியைச் சுற்றி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவு நீரை விடுவதால் ஏரி மாசுபடுகிறது. மேலும் அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. எனவே, நின்னக்கரை ஏரியைப் பாதுகாக்கக்கோரி கடந்த 2018இல் இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரி நேரில் ஆஜரானார். இதையடுத்து நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

மேலும் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டுவதின் மூலம் வாரியம் தொடங்கப்பட்டதன் நோக்கம் அர்த்தமற்றதாகிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சட்ட விதிகளை பின்பற்றாத உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடு கோர தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் உயர் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு - நால்வரை 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.