ETV Bharat / city

குறைந்த அளவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தயாராக உள்ளோம் - கரு. நாகராஜன்

author img

By

Published : Sep 8, 2021, 10:13 PM IST

தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன், vinayagar chathurthi
தமிழ்நாடு அரசு மொட்டை அடித்துள்ளது

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. தற்போது அனுமதி அளித்தால் கூட குறைந்த அளவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தயாராக உள்ளதாக தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி இன்று (செப். 8) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பெறப்பட்ட லட்சக்கணக்கான விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தபால் அட்டைகளை தலைமை செயலக முகவரிக்கும், சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டு முகவரிக்கும் அனுப்பி வைத்தனர்.

முதலமைச்சர் முகவரிக்கு கடிதம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு. நாகராஜன் கூறுகையில்," பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சருக்கு வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் பெற்ற வாழ்த்து அட்டையை முதலமைச்சர் விலாசத்திற்கு அனுப்ப உள்ளோம்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் ஊரடங்கே இருக்காது என்று கூறினார்கள். ஏசி (குளிரூட்டி) இருக்கும் இடத்தில் தான் கரோனா அதிகம் பரவும். அப்படி இருக்க திரையரங்கிற்கு இந்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்து மக்களுக்கு விரோதமாக விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன், vinayagar chathurthi
முதலமைச்சர் முகவரிக்கு அனுப்பப்படவுள்ள கடிதங்கள்

வாழ்த்துக்காக காத்திருக்கிறோம்

மேலும், தமிழ்நாடு அரசு கோயில்களுக்கு மொட்டை அடிக்க இலவசம் என்று அறிவித்துள்ளது போன்று, தமிழக மக்கள் உணர்விற்கு அரசு மொட்டை அடித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்து மக்களுக்கு ஒரு முறை கூட வாழ்த்து தெரிவித்தது இல்லை. மதச்சார்பற்ற கட்சி என்கிறார்கள், ஆனால் மதம்சார்ந்து தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலாவது இந்து மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து கூறுவார் என ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறோம்.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை தற்போது அனுமதி கொடுத்தால் கூட குறைந்த அளவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தயாராக உள்ளோம். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டம், சிஏஏ சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சி என்கிற நோக்கத்திலே எதிர்த்து தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகின்றது. குடியுரிமை சட்டத்தால் இந்திய குடிமகன் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை" என்று பேசினார்.

பாஜக மதம் சார்ந்து செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், விநாயகர் சதுர்த்தியை வைத்து மத ரீதியிலான அரசியலை திமுக செய்து வருகிறது" என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: ஒரே இணைப்பில் இம்மூன்றும் - மத்திய அரசுடன் கைக்கோத்த திமுக அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.