அதிமுக பொன்விழா - எம்ஜிஆர் கடந்து வந்த பாதை

author img

By

Published : Oct 17, 2021, 12:00 PM IST

அதிமுக பொன்விழா
அதிமுக பொன்விழா ()

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தனது பொன்விழாவை இன்று (அக். 17) கொண்டாடும் நிலையில் அதிமுக நிறுவனரான எம்ஜிஆர், அதிமுக கட்சியைத் தொடங்குவதற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

திரைப்படங்களில் நடித்து பிரபலமான எம்ஜிஆருக்கு 1950-60களில் மக்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. மேலும், எம்ஜிஆருக்கு அரசியல் கட்சி தொடங்க அந்தச் சமயத்தில் விருப்பமில்லை, பணமும் இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எனினும் திமுகவைத் தொடங்கிய சி.என் அண்ணாதுரையின் செல்லப்பிள்ளையாக எம்ஜிஆர் இருந்தார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். பிறகு 1969ஆம் ஆண்டு அண்ணாவின் இறப்பிற்கு பின் திமுகவில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தபோது மு. கருணாநிதி முதலமைச்சராக்கப்பட்டார். இதனை எம்ஜிஆரும் ஏற்றுக்கொண்டார்.

அண்ணா - எம்ஜிஆர்
அண்ணா - எம்ஜிஆர்

கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கம்

இது குறித்த தெளிவான விளக்கத்தை சமூகவியல் ஆய்வாளர் பேராசிரியர் திருநாவுக்கரசு கூறுகையில், "1972ஆம் ஆண்டு வரை திமுக கட்சியில் கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு நல்ல உறவு இருந்துவந்தது. பிறகு இருவருக்கும் உள்கட்சி பூசல் வந்ததது.

இதனால் கருணாநிதி, ‘கட்சியின் வளர்ச்சி குறித்து தன்னை எம்ஜிஆர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார்’ எனக் கூறி எம்ஜிஆரை கட்சியிலிருந்து அக்டோபர் 10, 1972ஆம் ஆண்டு தற்காலிகமாக நீக்கினார். பின்னர், நான்கு நாள்களுக்குப் பிறகு அக்டோபர் 14ஆம் தேதியன்று எம்ஜிஆர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்ஜிஆருடன் கலைஞர்
எம்ஜிஆருடன் கருணாநிதி

திமுகவிலிருந்து எம்ஜிஆரை வெளியில் கொண்டுவர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் குறிப்பாக மறைந்த முன்னாள் செயலாளர் கல்யாண சுந்தரத்தின் பங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. ’திமுக ஒரு இனவாத கட்சி. அந்தக் கட்சியை உடைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்’ என உள்கட்சி கூட்டங்களில் கல்யாண சுந்தரம் கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு

தொடர்ந்து பேசிய அவர் “அப்போது மத்தியில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆண்டது. தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் காமராஜ் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் இந்திரா காந்தியை எதிர்த்து வந்தனர். இந்த நேரத்தில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் குறிப்பாக மோகன் குமாரமங்கலம், மற்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இந்திரா காந்தியுடன்
இந்திரா காந்தியுடன் எம்ஜிஆர்

அப்போது தான் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை உணர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், எம்ஜிஆரை டெல்லி அழைத்துச் சென்று இந்திரா காந்திக்கு அறிமுகப்படுத்தினர். இதனையடுத்து இந்திராவின் ஆதரவும் எம்ஜிஆருக்கு கிடைத்தது. இதனால், எம்ஜிஆரும் கட்சி தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டார்” என்றார்.

எம்ஜிஆரை கைக்குள் அடக்க முயன்ற காங்கிரஸ்

எம்ஜிஆரின் அரசியல் காலங்கள் குறித்து அரசியல் ஆய்வாளர் சி.லக்ஷ்மணன் கூறுகையில் "அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்கட்சி பூசல் வழக்கமாக இருக்கும். இதேபோல கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் பெரும்பாலான விஷயங்களில் முரண்பாடு இருந்து வந்தது.

கலைஞர்கள்
கருணாநிதி-எம்ஜிஆர்

எம்ஜிஆர் திமுகவுக்காக கடுமையாக உழைத்தாலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. திமுகவுக்கு எம்ஜிஆர் மூலம் நல்ல செல்வாக்கும் கிடைத்தது. இதனால் எம்ஜிஆர், கருணாநிதியை கேள்விகள் கேட்டவுடன், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

காமராசரைச் சந்தித்த எம்ஜிஆர்
காமராஜருடன் எம்ஜிஆர்

அந்த சமயத்தில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. இதனால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆரை காங்கிரஸ் கட்சி தமது பக்கம் இழுக்க, பல்வேறு முயற்சிகளை செய்தது. ஏனெனில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை மக்கள் மத்தியில் இழந்துவிட்டது. இதனால் எம்ஜிஆரை குறி வைத்து தமது பக்கம் சேர முயற்சித்தது.

புதிய கட்சித் தொடங்கிய எம்ஜிஆர்

பிறகுதான் எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்க விரும்பி பல அரசியல்வாதிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அக்டோபர் 17, 1972ஆம் ஆண்டு அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார். திமுகவில் இருந்த முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதனால் சென்னை மெரினாவில் ஒரு பிரம்மாண்ட கூட்டமே நடைபெற்றது. இதில், எம்ஜிஆர் தனது கட்சியை பற்றி விளக்கி கூறினார்” எனத் தெரிவித்தார்.

மக்கள் பணியில்
அலை கடலென திரண்டிருந்த மக்கள் மத்தியில் எம்ஜிஆர்

1973ஆம் ஆண்டே அதிமுகவின் பலம் மக்கள் மத்தியில் தெரியவந்தது. 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் என்பவர் வெற்றி பெற்றார்.

இது அதிமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி. இதன் பிறகு 1977-80, 1980-87ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் எம்ஜிஆர் தலைமையில் அதிமுக வெற்றி பெற்றது. அக்காலக்கட்டங்களில் திமுக கடும் சரிவை சந்தித்தது.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு - சசிகலா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.