சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7 ஆம்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று(டிச.04) அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அவர்களின் மனுக்களை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 15 பேர் முன் மொழிந்தனர். 15 பேர் வழிமொழிந்தனர். இதனிடையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு 32 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாக 200 - க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் போட்டியிட அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருப்பதோடு, அவர்கள் மீது கட்சியின் சார்பில் எந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் அதிமுகவின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்றும், முன்மொழியவும் வழிமொழியும் முடியும் என்றும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களிடம் மனுக்களை பெறுவதற்காக, சசிகலா வருகை தர இருப்பதாக ஒரு கோஷ்டி தீவிரமாக வதந்திகளை பரப்பி கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு எழுந்தது.
இதையும் படிங்க: Omicron India cases: குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு