ETV Bharat / city

உயர் அலுவலர்களுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆலோசனை !

author img

By

Published : Jun 4, 2021, 6:04 AM IST

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திட்டங்கள் செயலாக்கம் குறித்து உயர் அலுவலர்களுடன் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

சென்னை: தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில், ஆதி திராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆதி திராவிடர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் , ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கான சிறப்பு சுய வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் முழு மானியத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பழங்குடியினர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம், தேசியதுப்புரவுத் தொழிலாளர்கள், நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தேசியப் பட்டியலினத்தோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம், தமிழ் நாடு முழுவதும் தாட்கோ மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விடுதிகள், அலுவலகக் கட்டடங்கள், நபார்டு திட்டப்பணிகள் போன்ற கட்டுமானப் பணிகள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்தல், பல்வேறு ஒன்றிய அரசின் திட்டங்கள், பழங்குடியினர் நல வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விரிவான பழங்குடியினர் நல மேம்பாட்டுத் திட்டம், பழங்குடியினர் வன உரிமைச் சட்டம் 2006 ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது .

நடப்பாண்டில் இத்துறையின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்குத் தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கிட ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர் அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் எஸ்.மதுமதி, தாட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ் . விஜயராணி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் த வி.சி. ராகுல், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.