ETV Bharat / city

நாளை தேர்தல்: பாதுகாப்பு பணியில் சுமார் 30,000 ஆயுதப்படை காவலர்கள்

author img

By

Published : Apr 5, 2021, 7:43 AM IST

தேர்தலன்று சுமார் 23,500 ஆயுதப்படை பாதுகாப்பு: சென்னை மாநகர காவல் ஆணையர்
தேர்தலன்று சுமார் 23,500 ஆயுதப்படை பாதுகாப்பு: சென்னை மாநகர காவல் ஆணையர்

”காவல் துறை ஆயுதப்படையைச் சேர்ந்த சுமார் 23,500 காவல் துறையினரும், 18 மத்தியக் காவல் படையினரும், 10 சிறப்பு காவல் படையினரும், 3000 சென்னை ஊர்க்காவல் படையினரும், 1,800 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினரும், 700 ஓய்வுபெற்ற காவலர்கள், ராணுவத்தினர் ஆகியோரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்” - சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை மாநகர காவல் ஆணையர்

அப்போது பேசிய அவர், "சென்னை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 2,083 வாக்குப்பதிவு இடங்களும், 11,872 வாக்குச்சாவடி மையங்களும், 792 மொபைல் பார்ட்டிகளும் அமைந்துள்ளன. இதில் 327 பதற்றமான வாக்குப்பதிவு இடங்களில் 1,349 வாக்குச்சாவடி மையங்களும், 10 மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு இடங்களில் 30 வாக்குச்சாவடி மையங்களும் அமைந்துள்ளன.

வாக்கு எண்ணும் மையங்கள்

லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்துவ கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ளன.

இதுநாள்வரை சென்னை மாநகரம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 371 வழக்குகளும், தேர்தலுக்கு முந்தைய நாள்களில் தடைபெற்ற சம்பவங்கள் குறித்து 18 வழக்குகளும், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியதாக 605 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பணப்பட்டுவாடா புகார்கள்

வாகனத் தணிக்கையின்போது பணம் சுமார் 44.11 கோடி ரூபாயும், தங்கநகைகள் சுமார் 50 கிலோவும், வெள்ளி நகைகள் சுமார் 119 கிலோவும், வைர நகைகள் சுமார் 8.5 சென்டும், 2,889 லிட்டர் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த புகாரில் ஒன்பது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

23,500 ஆயுதப்படை

சென்னை, மாநகரக் காவலர்கள் உள்பட காவல் துறையில் உள்ளூர் காவல் துறை ஆயுதப்படையைச் சேர்ந்த சுமார் 23,500 காவல் துறையினரும், 18 மத்தியக் காவல் படையினரும், 10 சிறப்பு காவல் படையினரும், 3,000 சென்னை ஊர்க்காவல் படையினரும், 1,800 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினரும், 700 ஓய்வுபெற்ற காவலர்கள், ராணுவத்தினர் ஆகியோரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் கண்காணிப்பு

தேர்தலன்று (ஏப். 6) ஏதேனும் குறைகள் அல்லது குற்றச்சாட்டுகள் எந்த அரசியல் கட்சிக்கு இருந்தால், 04423452437, 9498181239 இந்த உதவி எண்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தேர்தல் பரப்புரை இன்று (ஏப். 4) நிறைவுபெற உள்ள நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புரை செய்கின்றனரா என்பதை தேர்தல் அலுவலர்களுடன் காவல் துறையும் கண்காணிக்கும்.

வெளிமாவட்டத்திலிருந்து வருபவர்களுக்கு அனுமதியில்லை

வெளிமாவட்டத்திலிருந்து வருபவர்களுக்கு இன்று மாலை 7 மணிக்கு மேல் சரியான காரணம் இல்லாமல் சென்னையில் இருக்க அனுமதியில்லை. அப்படி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று மாலை விடுதி, கல்யாணம் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்யப்படும். மக்கள் தைரியமாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தலாம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.