தொழிலதிபர் கடத்தல் -சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தலைமைக்காவலர்

author img

By

Published : Oct 6, 2021, 7:53 PM IST

Updated : Oct 6, 2021, 8:46 PM IST

சினிமா பட பாணியில் தொழிலதிபர் கடத்தல்

சென்னையில் சினிமா பட பாணியில் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கடத்தல் கும்பலை, தலைமைக் காவலர் 1 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று பிடித்துள்ளார்.

சென்னை: சேத்துப்பட்டு ஹாரிங்டன் 5ஆவது அவென்யூ சாலையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மூசா (80). இவர் சந்தன கடத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் அக்.3ஆம் தேதி மதியம் ஈசிஆரில் உள்ள தனது மகன் பஷீர் வீட்டுக்குச் சென்றுவிட்டு சேத்துபட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரிடம் ஏற்கனவே பணியாற்றிய குமார் என்கிற அருப்பு குமார் உள்பட ஐந்து பேர் கொண்ட கும்பல், வீட்டு வாசல் அருகே அவரை காரில் கடத்தி போரூர் அழைத்துச் சென்றனர். அவர் காரில் வைத்திருந்த துப்பாக்கியை பயன்படுத்தியும் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து மிரட்டி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக போரூரில் செட்டியார் அகரம் என்ற பகுதியிலுள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் போதையில் இருந்ததாக கைவிலங்கு போட்டு தொழிலதிபர் மூசாவை அடைத்து வைத்துள்ளனர். மூசா குடிபோதைக்கு அடிமையானவர் என கூறி , போதை மறுவாழ்வு மையத்தில் கட்டி போட்டு வைத்துள்ளனர்.

பேரம் பேசிய கடத்தல் கும்பல்

அதன் பின் மூசாவின் செல்போன் மூலம் அவரது மகன் பஷீருக்கு அழைப்பு விடுத்து 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக இது குறித்து அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் , சினிமாவில் வரும் கடத்தல் கும்பல் போல், பேரம் பேச ஆரம்பித்துள்ளனர்.

பின்னர், 3 கோடி, 2 கோடி, ஒரு கோடி, 50 லட்சம் எனப் படிப்படியாக குறைத்து இறுதியாக 25 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பணத்தை எடுத்துக்கொண்டு திங்கள்கிழமை (அக்.04) தாம்பரம் அருகே வர கூறி போனை சுவிட்ச் ஆப் செய்தனர். இதனையடுத்து பஷீர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தாம்பரத்திற்குச் சென்றனர்.

ஆனால் கடத்தல்காரர்கள் அங்கு வரவில்லை. இதனையடுத்து மீண்டும் மூசா செல்போனுக்கு முயற்சி செய்தபோது மூசாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மூசாவின் செல்போன் டவர் மூலம் அவர் இருப்பிடத்தை காவல் துறையினர் தேடிவந்தனர்.

கடத்தல் கும்பலை விரட்டிப் பிடித்த காவலர்

இந்நிலையில், நேற்று (அக்.05) மீண்டும் மூசாவின் செல்போனில் இருந்து போன் செய்த கடத்தல்காரர்கள் எழும்பூர் அல்சா மால் அருகே 25 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வரச்சொல்லி கூறியுள்ளனர். இதனையடுத்து 25 லட்சம் ரூபாய் பணத்துடன் காவல் துறையினரும், பஷீரும் எழும்பூர் அல்சா மால் அருகே தயாராக இருந்தனர்.

அங்கு மூசாவுடன் காரில் வந்த கடத்தல்காரர்கள் 25 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றனர். இரு சக்கர வாகனத்தில் மறைந்திருந்த தலைமை காவலர், அந்த காரை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது எழும்பூர் கோ ஆப் டெக்ஸ் சிக்னல் அருகே நின்றிருந்த காரை மடக்கிப் பிடித்து காரின் கதவை திறக்க முயற்சி செய்தார்.

அப்போது அந்த கடத்தல்காரர்கள் காரை எடுத்ததால், தலைமைக் காவலர் காரின் முன்பகுதியில் பாய்ந்து, சுமார் 1 கிமீ தூரம் வரை காருடன் சென்று கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தார். இதில், குமார் என்கிற அருப்பு குமார், பிரகாஷ் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களுடன் இருந்த கடத்தல்காரர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

வாக்குமூலம்

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு கடத்தல்காரர்களை சேத்துபட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மூசா சந்தனமரம், செம்மரம் கடத்தல் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருவதாகவும், அதில் நிறைய பணம் இருப்பதையும் தெரிந்துகொண்ட குமார் அவரை கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.

மூசாவிடம் நீண்டகாலமாக பணிபுரிந்துவந்த அருப்பு குமார், தான் வேலை பார்த்ததற்கு மூசா முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என அதிருப்தியில் இருந்ததாகவும், இதனையடுத்து தொழிலதிபர் மூசாவை கடத்தி பணம் பறிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர். பிடிபட்ட அருப்பு குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மீட்பு

மேலும், கடத்தல் சம்பவத்தில் தப்பியோடியவர்கள் காந்தி, வினோத், மணி என்பது விசாரணையில் தெரியவந்தது. தப்பியோடிய அனைவரும் குமார் ஜெயிலில் இருக்கும்போது நட்பானவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் சங்கீதா, அவரது கணவர் காந்தி ஆகியோர் நடத்திவரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் மூசா கட்டி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

தொழிலதிபர் கடத்தல்

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மூசாவை மீட்டு அங்கிருந்த சங்கீதா, காந்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய மூவரை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணம், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: பட்டுப்புடவை பாா்சல்களில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்

Last Updated :Oct 6, 2021, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.