ETV Bharat / city

சென்னையில் அரசுப்பேருந்து மோதி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு... ஓட்டுநருக்கு வலைவீச்சு

author img

By

Published : Aug 15, 2022, 7:56 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் சுதந்திர தின விழாவைக் கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பள்ளி மாணவி மீது மாநகரப்பேருந்து மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய அரசுப்பேருந்து ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை: குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி லட்சுமிஸ்ரீ(17) மீது மாநகரப்பேருந்து மீதுமோதியது. அப்போது கீழே விழுந்த அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் இன்று (ஆக.15) சுதந்திர தின விழாவைக் கொண்டாடிய பின்னர், வீடு திரும்பியபோது பொழிச்சலூரிலிருந்து அஸ்தினாபுரம் செல்லும் பேருந்து, மாணவியின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.

தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்து தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளில் சைக்கிளில் 2 மாணவிகள் ஓரமாக செல்வதும் அதனைப் பின் தொடர்ந்து வரும் மாநகரப்பேருந்து மோதும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இவ்வாறு சென்னையில், சுதந்திர தின விழாவிற்காக பள்ளி சென்று திரும்பிய மாணவி பரிதாபமாக பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புறாக்களை வானில் பறக்க விட்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்!!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.