ETV Bharat / city

கையில் 2 குழந்தை; கணவரை சேர்த்து வையுங்கள் - நிறைமாத கர்ப்பிணி கண்ணீர் புகார்...

author img

By

Published : Jun 25, 2022, 10:40 AM IST

இரண்டு குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னை கைவிட்டு சென்ற கணவனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீ தேவி
ஸ்ரீ தேவி

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த டேனியல் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி(31). நிறைமாத கர்ப்பிணியான இவர் தனது மூன்று வயது மகன், ஒரு வயது மகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரிந்து சென்ற தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜூன்24) இரண்டு குழந்தைகளுடன் நிறைமாத அவர் அளித்துள்ள புகாரில், கணவர் தன்னை விட்டு பிரிந்து உறவினருடன் வசித்து வருவதாகவும், அதனால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஆகையால், கணவரை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தற்போது 9 மாத கர்ப்பிணியான நான் சிறு வயதில் இருந்தே தாய் தந்தை இல்லாமல் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தேன். நானும் எனது கணவர் டேனியலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், மேட்ரிமோனி மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின், பெரம்பூரில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தோம்.

பிரிந்து சென்ற கணவரை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க கோரிக்கை

எனது கணவர் ராமாபுரத்தில் செயல்படும் கிராபிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதுடன் சினிமா கிராபிக்ஸ் பணிகளையும் செய்து வந்தார். இந்நிலையில், எனது கணவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் கர்ப்பிணியாக உள்ள என்னை தவிக்க விட்டுச் சென்றுவிட்டார். இதற்கு முன்பு ஒருமுறை, இதேபோல் என்னை விட்டு சென்று இருந்தார்.

அப்போது காணாமல்போன எனது கணவர் டேனியலை கண்டுபிடித்து தருமாறு திருவிக நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் டேனியலை தேடி கண்டுபிடித்து ஒப்படைத்தனர். அப்போது டேனியல் காவல்நிலையத்தில் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வதாக, எழுதி கொடுத்து விட்டு வந்தார். ஆனால் தற்போது திடீரென தலைமறைவாகி விட்டார்' என்று கூறினார்.

இந்நிலையில், 'பெற்றோரும் இல்லாத நான், எனது கணவனையே என் வாழ்க்கை என்று நம்பி வாழ்வை தொடங்கினேன். மேலும், எனது கணவரை அவருடைய அண்ணனும் அண்ணியும் அபகரித்து வைத்துள்ளனர். இதனிடையே நான் வீட்டு வாடகை மற்றும் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தரக் கூட பணம் இல்லாமல் கடந்த 5 மாதங்களாக செய்வதறியாமல் கஷ்டபட்டு வருகிறேன்.

எனவே, போலீசார் இதில் தலையிட்டு கணவரை மீட்டுத்தர வேண்டும்' என கண்ணீர் மல்க கூறினார். குறிப்பாக, உறவினர்கள் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வசித்து வரும் தனக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டால் கூட உதவி செய்ய யாரும் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: யாரோ ஒருவரின் அலட்சியத்தால் பலியான பெண் கவிஞர்... யார் இந்த வாணி கபிலன் ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.