சென்னை மண்ணடியைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை நகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கடைகளில் வசூலான பணத்தை ஊழியர் சுரேந்திரன் என்பவர் மண்ணடியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு நாள்தோறும் கொண்டுவருவார்.
வழக்கம்போல் சுரேந்திரன் நேற்று (ஜூலை 28) மாலை இருசக்கர வாகனத்தில் வசூல்செய்த 10 லட்சம் ரூபாயுடன் மண்ணடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலையில், சுரேந்திரன் சென்றுகொண்டிருந்தபோது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் வழிமறித்து தாக்கி அவரிடமிருந்த 10 லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்றது.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிந்த காவல் துறையினர், கொள்ளைச் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவியைக் கைப்பற்றி ஆய்வுசெய்து சந்தேகத்தின்பேரில் 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபரை கடத்தி பிட் காயின்களை கொள்ளையடித்த 6 பேர் கைது