ETV Bharat / state

தொழிலதிபரை கடத்தி பிட் காயின்களை கொள்ளையடித்த 6 பேர் கைது

author img

By

Published : Jul 29, 2021, 6:00 PM IST

பிட்காயின்
பிட்காயின்

தொழிலதிபரை கடத்தி ரூ. 13 லட்சம் மதிப்புள்ள பிட் காயின், ரூ. 67 ஆயிரம் பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்: மதுரையை அடுத்த விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (38). இவர் காயின் பஜார் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இவர் கடந்த மாதம் தனது சொந்த ஊரான ராஜபாளையம் அருகிலுள்ள தேவர்குளம் சென்றுவிட்டு, மீண்டும் மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது விருதுநகர், ஆமத்தூர் அருகே காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல், சரவணனை வழிமறித்து தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளனர்.

பிட் காயின், நகை, பணம் கொள்ளை

பின்னர் சரவணனை குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஒரு காட்டேஜில் அடைத்து வைத்து, அவரிடமிருந்த 30 பிட் காயின்களை பணமாக மாற்றித்தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். மேலும் சரவணன் வைத்திருந்த சுமார் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள டிரான், என்.கேஸ் பிட் காயின் ஆகியவற்றை தங்களது வலைதள முகவரிக்கு மாற்றிக்கொண்டுள்ளனர்.

மேலும் சரவணன் ஏடிஎம் கார்டிலிருந்த ரூ. 67 ஆயிரம் பணம், அவர் அணிந்திருந்த 4 பவுன் பிரேஸ்லெட், 3 பவுன் தங்க செயின், ஒன்றரை பவுன் எடை கொண்ட மூன்று மோதிரங்கள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சரவணன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொழிலதிபரின் முன்னாள் நண்பர் கைது

காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தொழிலதிபர் சரவணனின் முன்னாள் நண்பரான ஆறுமுகச்சாமியே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கனக சபாபதி, கந்தசாமி, தளவாய் மாடன், மைதீன் பிச்சை, சக்திவேல் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போதை மாத்திரை விற்பனை - 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.