தருமபுரி: புகழ்பெற்ற ஆட்டுச்சந்தையான நல்லம்பள்ளி ஆட்டுச்சந்தையில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைதோறும் ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்த ஆட்டுச் சந்தையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஆடு வளர்க்கும் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.
இன்னும் சில நாள்களில் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி விவசாயிகள் பொங்கல் செலவுக்காக ஆடுகளை அதிக அளவில் விற்பனை செய்ய இன்று (ஜனவரி 11) வந்திருந்தனர். தருமபுரி மாவட்டத்தில் வழக்கமாக பொங்கலுக்கு முன் தினம் தங்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். அதற்காக ஏராளமானோர் ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.
கடந்த வாரத்தைவிட இந்த வாரம் ஒரு ஆட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது. ஆடுகளின் விலை 7,500 ரூபாயில் தொடங்கி 16 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு விலையில் விற்பனையானது. இன்று மட்டும் இரண்டாயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Paytm, GPay முடக்கம் - பொதுமக்கள் அதிர்ச்சி!