விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவசிகுமார் (23). இவரின் அக்கா ஈஸ்வரிக்கும் அவரது கணவர் முருகனுக்கும் குடும்ப பிரச்னை இருந்துள்ளது. அக்கா ஈஸ்வரிக்கு ஆதரவாக மைத்துனர் முருகனிடம் தவசிகுமார் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 16) மாலை தவசிகுமார் நெடுங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த சுந்தர மூர்த்தி என்பவர் தனது சித்தப்பா முருகனிடம் தகராறு செய்யக்கூடாது என எச்சரித்துள்ளார்.
இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சுந்தரமூர்த்தி, தவசிகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றார். படுகாயங்களுடன் கீழே விழுந்த தவசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தவசிகுமார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை செய்து தப்பியோடிய சுந்தர மூர்த்தியை கூமாபட்டி காவல்துறையினர் தனிப்படை அமைத்து இன்று (செப்டம்பர் 17) கைது செய்தனர்.