நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு அமெரிக்க கூட்டுப்படை பாதுகாப்பு வழங்கிவந்தது உலகறிந்த செய்தி. இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அமெரிக்காவின் படைகளுக்கு நேட்டோ நாடுகள் அதற்குரிய பணத்தைக் கட்டிவந்தன.
இந்நிலையில், ஜெர்மனியில் நிலைக்கொண்டிருக்கும் அமெரிக்க துருப்புகளுக்கு அந்நாட்டு அரசு அண்மைக் காலமாக அதற்குரிய கட்டணத்தைச் செலுத்துவதில்லை என அறிய முடிகிறது.
இந்த மாத தொடக்கத்தில் ஜெர்மனியில் அமெரிக்க ராணுவ இருப்பைக் குறைக்க ட்ரம்ப் பென்டகனுக்கு உத்தரவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஜெர்மனியில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 25,000 ஆக குறைக்கப்படும். அமெரிக்க துருப்புக்களுக்கு கட்ட வேண்டிய பணத்தைச் செலுத்திய பின்னர் ஜெர்மனிக்கு மீண்டும் படை அனுப்பப்படும்.
தற்போது, சுமார் 35 ஆயிரம் அமெரிக்க துருப்புகள் ஜெர்மனியில் நிறுத்தப்பட்டுள்ளன. அது 25 ஆயிரமாக குறைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஜெர்மன் ஊடக நிறுவனமான பில்ட் லைவிடம் பேசிய ஜெர்மனிக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ரிச்சர்ட் கிரெனெல், "ஜெர்மனியில் இன்னும் 25,000 வீரர்கள் இருப்பார்கள், அது சிறிய எண்ணிக்கையில்லை" எனக் கூறினார்.
வெள்ளை மாளிகையின் இந்த முடிவு அமெரிக்க வெளியுறவு, அலுவலர்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
ஐரோப்பாவில், அமெரிக்காவின் படையைக் குறைப்பது என்பது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பில் இழப்பை ஏற்படுத்தும் என்றும், இந்த குறைப்பு வாஷிங்டனுக்கும் பெர்லினுக்கும் இடையிலான உறவைப் பெரிதும் பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் அணுசக்திப் பிரச்னைகள், நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திட்டம், பாதுகாப்புச் சுமைப்பகிர்வு போன்றவற்றில் இரு நட்பு நாடுகளும் ஒன்றுகொன்று முரண்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.