திருவள்ளூர் அடுத்த ராமதண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (27). இவர் கடந்த மார்ச் 29ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான முறையில் தனது வீட்டில் இறந்துள்ளார்.
பின்னர், அவரது உறவினர்கள், அவரது உடலை அப்பகுதியிலுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்நிலையில், சில நாள்களுக்குப் பிறகு அவ்வூரைச் சேர்ந்த பொதுமக்கள், சிலர் ராஜசேகரின் மனைவி சுதாவிடம் சென்று உங்கள் கணவரை பக்கத்தை வீட்டைச் சேர்ந்த ரமேஷ் கட்டையால் தாக்கியதால் இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜசேகரின் மனைவி, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை மீண்டும் எடுத்து உடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் நேற்று (ஏப். 23) வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில் இடுகாட்டிலிருந்து ராஜசேகர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.