ETV Bharat / briefs

நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம்!

author img

By

Published : Jun 29, 2020, 1:19 AM IST

நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம்!
நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம்!

தஞ்சாவூர் : தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, நுண்ணீர் பாசனத் திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மானியம் வழங்கப்படுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனக் கருவிகள், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள், மழைதூவான் போன்ற உபகரணங்கள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் மானிய விலையில் அமைத்துத் தரப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.

பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 30.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மா, வாழை, நெல்லி போன்ற பழப்பயிர்கள், வெண்டை, கத்தரி, பாகல், பூசணி, மரவள்ளி போன்ற காய்கறிப் பயிர்கள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி போன்ற மலர் பயிர்கள் ஆகிய தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும், துணை நீர் பாசன மேலாண்மைத் திட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட வட்டங்கள் மற்றும் குறுவட்டங்களில் ஆழ்குழாய் அல்லது திறந்தநிலை கிணறு அமைப்பதற்கு ரூபாய் 25,000 மானியமும், மின்மோட்டார் மற்றும் டீசல் இன்ஜின் வாங்குவதற்கு ரூபாய் 15,000 மானியமும், பாசன நீர் பிவிசி பைப்புகள் வாங்குவதற்கு ரூபாய் 10,000 மானியமும், நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சமாக ரூபாய் 40,000 மானியமும் வழங்கப்படுகிறது.

துணை நீர் பாசன மேலாண்மைத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மைத் திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற விரும்பும் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயலுடைய வரைபடம், மண் மற்றும் நீர் மாதிரி அறிக்கைகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு, 04362-271880, 9443898919 ஆகிய எண்களில் தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தையும், 9965362562 என்ற எண்ணில் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையும், தஞ்சாவூர் மற்றும் பூதலூர் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9842184435 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9488945801 என்ற எண்ணிலும்,

பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9943422198 என்ற எண்ணிலும், பாபநாசம், அம்மாபேட்டை மற்றும் திருவையாறு வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9940843213 என்ற எண்ணிலும், கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9655577082 என்ற எண்ணிலும், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9445257303 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.