ETV Bharat / briefs

'இந்த நாளை எப்படி மறப்பேன்'- இயக்குநர் சசிகுமார் நெகிழ்ச்சி!

author img

By

Published : Jul 4, 2020, 7:29 PM IST

சசிகுமார்
சசிகுமார்

சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ளது குறித்து இயக்குநர் சசிகுமார் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை அனைத்துமே வெற்றியடைவதில்லை. ரசிகர்கள் படத்தின் கதை, நடிகர், நடிகைகளின் நடிப்பு ஆகியவற்றை தராசுக்கோலில் அளந்துதான் படத்திற்கு மதிப்பளிக்கிறார்கள். அந்த வகையில், 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமார் நடித்து, இயக்கி, தயாரித்த இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகின்றன.

சத்தமே இல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது இத்திரைப்படம். இதில் நடித்திருந்த ஸ்வாதி, ஜெய், கஞ்சா கருப்பு, மைக்செட் ஜித்தன் ஆகியோர் தங்களது நடிப்புத் திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு அது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.

கண்கள் இரண்டால் பாடல், பழமை மாறாத தெருக்கள், சசிகுமார்-ஜெய் நட்பு என இன்னும் ஏராளமான விஷயங்கள் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தன. இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ளது குறித்து இயக்குநர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இந்த நாளை (ஜூலை 4) நான் எப்படி மறப்பேன்?. 12 ஆண்டுகளுக்கு முன்பு கம்பெனி புரொடக்‌ஷன்ஸில் ஒட்டுமொத்த குடும்பமும் தங்கள் முதல் தயாரிப்பின் முடிவைத் தெரிந்துகொள்வதற்காகப் பதற்றத்துடன் அமர்ந்திருந்தன. 'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் எங்கள் வாழ்க்கையையே மாற்றிய ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.