ETV Bharat / briefs

டிவி மூலம் வகுப்புகள் : அரசை நோக்கி கேள்விகளை எழும்பியுள்ள கமல்ஹாசன்!

author img

By

Published : Jul 10, 2020, 8:43 PM IST

சென்னை : தொலைக்காட்சி வழி கற்றலின் சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்கள் பற்றி எந்தவித களஆய்வும் செய்யப்படாமல் அவசரமாக எடுத்த முடிவாகவே தொலைக்காட்சி வகுப்பு அறிவிப்பை கருதுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

டிவி மூலம் வகுப்புகள் : அரசை நோக்கி கேள்விகளை எழும்பியுள்ள கமல்ஹாசன்!
டிவி மூலம் வகுப்புகள் : அரசை நோக்கி கேள்விகளை எழும்பியுள்ள கமல்ஹாசன்!

இதுதொடர்பாக அவர் இன்று (ஜூலை 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஊரடங்கில் இணையவழி வகுப்புகள் தேவை, இணைய வழி வகுப்புகளுக்கான கூடுதல் கட்டணம் வசூல் என தொடர்ந்து கல்வியாளர்களின் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் சூழலில், ஜூலை 13ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

இது ஊரடங்கில் மாணவர்களின் கல்வி தடைப்படக் கூடாது என எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்தாலும், இணையத்தையும் கைப்பேசியையும் மட்டுமே சார்ந்த இணைய கல்விமுறை என்பதால் 100 விழுக்காடு பெருநகரங்களுக்கு மட்டுமே இவை பொருந்தும்.

அப்படியிருக்க, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் என்பது நல்ல செய்தியாக தெரிந்தாலும், தீர யோசித்து அனைவருக்கும் பயன் தருவதற்காக எடுக்கப்பட்டதா அல்லது தனியார் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது, அரசுப்பள்ளி மாணவர்கள் விடுபட்டு போகிறார்களே என்ற எண்ணத்தில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன.

பல மாதங்களுக்கு முன்னே நடைமுறைக்கு வந்து செயல்படாமல் இருக்கும் கல்வி தொலைக்காட்சியைப் பற்றிய அறிமுகம், தொலைக்காட்சி வழி கற்றலின் சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்கள் பற்றி எந்தவித களஆய்வும் இல்லாமல், நடைமுறை பிரச்சனைகளை பற்றி யோசிக்காமல், அவசரமாக எடுத்த முடிவாகவே தெரிகிறது.

கல்வி அனைவருக்குமானது. பொருளாதார பாகுபாடுகள் தாண்டி தரமான கல்வி அனைத்து மாணவர்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் நீதி மய்யம் சில கேள்விகளை முன்வைக்கிறது.

ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் எவ்வாறு ஒரு தொலைக்காட்சியின் வழி கல்வி கற்க முடியும். அதைத் தவிர்த்திட அரசின் திட்டம் என்ன?

ஆசிரியர் மட்டுமே பேசி மாணவர்கள் கேட்க மட்டுமே செய்யும் இந்த ஒரு வழிக்கல்வி முறையில் முன் அனுபவம் இல்லாத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொலைக்காட்சி வழி வகுப்புகள் எடுக்க முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு விட்டதா?

மாணவர்களுக்கு பாடத்தில் சந்தேகங்கள் ஏற்படின் அதைத் தீர்த்திட யார் உதவி செய்வார்? முதல் தலைமுறையாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இது எந்தளவு வாய்ப்பை வழங்கும் ?

தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் அனைத்து பாடங்களுக்கும் முறையான விளக்க அட்டவணை தயாராகி விட்டதா? இன்னும் முறையான அட்டவணையை வெளியிடாதது ஏன்? ஏற்கெனவே அறிமுகப்படுத்த பட்ட கல்வி தொலைக்காட்சி பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் முடங்கி கிடக்க யார் காரணம்?

இன்னும் தொலைக்காட்சியே இல்லாத வீடுகள் கொண்ட கிராமங்கள், கேபிள் டிவி இணைப்பு இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களுக்கான அரசின் அறிவுரை என்ன?

கற்றல் என்பது ஒவ்வொரு மாணவரின் திறன் சார்ந்தது. கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் பாடத்தை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அரசு திட்டமிட்டுள்ளதா?

கல்விச்சாலைகளுடனும், கற்றலுடனும் மாணவர்களுக்கு இருக்கும் தொடர்பு அறுந்து விடக்கூடாது என்பதற்காக கற்பித்தல் முயற்சிகள் நல்லதாக இருந்தாலும் கல்விப் பாடநூல்களிலும், வகுப்பறையிலும் மட்டுமே இல்லை.

இந்த ஊரடங்கு காலத்தில் பாடநூல் கல்வியை போதிப்பதில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொண்டு வாழ்க்கைக் கல்வியான கைவினைக் கலைகள், கலை வடிவங்கள், விவசாயம், மரபு சார்ந்த தொழில்கள், செய்முறைத்திட்டங்கள் போன்றவற்றைக் கற்க மாணவர்களை ஏன் ஊக்குவிக்கக் கூடாது?

எனவே அரசு குழந்தைகள் கல்வி விஷயத்தில் அவசரம் காட்டாமல், முன்பின் முரணாக ஆணைகள் பிறப்பிக்காமல், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறையுடன் கலந்து ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என அந்த அறிக்கையில் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.