ETV Bharat / briefs

தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு - காவல்துறையினர் விசாரணை!

author img

By

Published : Apr 24, 2021, 6:19 PM IST

புதுச்சேரி: ரெயின்போ நகரில் தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகையைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

jewelry theft at businessman's house in Pondicherry
jewelry theft at businessman's house in Pondicherry

புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் இம்மானுவேல் தாமஸ். இவரது மனைவி தெய்வக்கனி. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர்கள் தங்கள் வீட்டின் மேல் பகுதியில் இரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அங்கே வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்து, அதிலிருந்த 60 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர்.

காலை எழுந்ததும் கீழே வந்த தெய்வக்கனி, வீட்டின் கதவு, பீரோ ஆகியவை திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், பீரோவிலிருந்த நகைகள் மாயமானதைக் கண்ட அவர், தனது கணவரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் இம்மானுவேல் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களையும் ஆய்வு செய்து, தப்பியோடிய கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.