ETV Bharat / briefs

ஆழ்துளைக் கிணற்றில் ரசாயனங்கள் கலப்பதாக விவசாயிகள் புகார்

author img

By

Published : Jun 15, 2020, 6:16 PM IST

ஆழ்துளை கிணற்றில் ரசாயனங்கள் கலப்பதனால் விவசாயிகள் வருத்தம்
ஆழ்துளை கிணற்றில் ரசாயனங்கள் கலப்பதனால் விவசாயிகள் வருத்தம்

கோவை: விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ஆழ்துளைக் கிணற்றில் இரசாயனங்கள் கலப்பதால் நீரின் தன்மை மாறி விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், விவசாயியான இவர் தனது நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார். அவரது தோட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டாரை மாற்றுவதற்காக நேற்று அதனை மாற்றும் பணி நடைபெற்றுள்ளது.

அப்போது கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் கருப்பு நிறமாக மாறி இருந்ததாலும் மேலும் அதிலிருந்து வந்த தண்ணீர் அனைத்தும் கருப்பு நிறமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

10 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட வெண்மை வண்ண பைப்புகள் கருப்பு மற்றும் பழுப்பு நிறமாக மாறி இருப்பதால் நிலத்தடி நீரில் ரசாயனம் கலந்திருக்கலாம் எனக்கூறிய சண்முகம், அரசூரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் அவர்கள் யாரேனும் ஆழ்துளைக் கிணறு மூலம் ரசாயனம் கலந்த நீரினை நிலத்துக்கடியில் விட்டிருக்கலாம், இதனால் நீரின் தன்மை மாறியிருக்கலாம் என சந்தேகித்துள்ளார்.

நிறம்மாறிய நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை, கால்நடைகளும் குடிப்பதில்லை இந்த நீரைக் கொண்டு விவசாயம் செய்தால் உரிய விளைச்சலும் கிடைக்காது என கவலை தெரிவித்த அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இது குறித்து மற்றொரு விவசாயியான சம்பத் கூறுகையில் தங்களுடைய பகுதியில் ஏராளமான ஃபவுண்டரி தொழிற்சாலைகள் உள்ளன இந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த மணலை, திறந்தவெளி மற்றும் குட்டை பகுதிகளில் கொட்டி விடுவதால் மழை காலங்களில் வரக்கூடிய தண்ணீர் நிறம் மாறி போவதாகவும் இதன் காரணமாக நீரின் தன்மை மாறி இருக்ககூடும் என்றார்.

இரசாயனம் கலந்த மணல் விதிமுறைப்படி மறுசுழற்சி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மாசுபாடு அடைந்து விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் என வருத்தம் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.