தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் இன்று (செப்.10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தருமபுரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்க முக்கியத்துவம் தரப்படும். மாவட்டம் முழுவதும் 400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கு சுமூக நல்லுறவு ஏற்படும் வகையில், ஏற்கனவே கிராமப்புறங்களில் உள்ள குழுவினை பலப்படுத்தி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற அடித்தட்டு ஏழை, எளிய மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களின் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி நகரப் பகுதியில் காவல்துறைகண்காணிப்பு பணியில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தருமபுரி பேருந்து நிலையம், சுற்றுப்புற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லாட்டரி சீட்டு, மதுபானம் விற்பனை, சூதாட்டம் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் வாகன விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.