ETV Bharat / briefs

சென்னையில் நிச்சயதார்த்தமான நபர் பாலியல் வழக்கில் கைது!

author img

By

Published : Sep 18, 2020, 9:42 AM IST

Arrest
பெண்ணுக்கு பாலியல் சீண்டல் தந்த இளைஞர் கைது

சென்னை: முகலிவாக்கத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த நபர் ஒருவர் பாலியல் சீண்டல் வழக்கில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணுக்குப் பாலியல் சீண்டல்:
சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் வளர்க்கும் நாயுடன் நடைப்பயிற்சி சென்றபோது, அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத நபர், அப்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து புகார் அளித்தும் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் தொடக்கத்தில் எடுக்கவில்லை என அப்பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளியைத் தானே தேடிய இளம்பெண்:
எனவே, சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அந்த நபரை தான் கண்டுபிடிக்கப்போவதாக அந்த பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

விளையாட்டாக சீண்டினேன்!

இதற்கிடையில் மாங்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு அந்த நபரைத் தேடி வந்தனர். இதில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் திண்டிவனத்தைச் சேர்ந்த ஆதாம் அலி (25) என்பதும்; அவர் முகலிவாக்கத்தில் தங்கி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார் என்றும் தெரியவருகிறது. இந்த நிலையில் அந்த நபரை கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தபோது விளையாட்டிற்காக அந்த பெண்ணிற்கு பாலியல் சீண்டல் தந்ததாகவும் கூறியுள்ளார்.

நேற்று நிச்சயதார்த்தம் - இன்று கம்பி எண்ணும் புதுமாப்பிள்ளை
இவருக்கு திண்டிவனத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததும் தெரியவந்தது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த கையோடு சென்னைக்கு வந்த அந்த நபரை மாங்காடு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபர் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த மறுநாளே கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.