திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் நகராட்சி சார்பில் அப்பகுதியில் நீர் தேக்க குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியின் அருகே உள்ள காவக்கார பகுதியில் வசித்து வருபவர் சங்கர் - இளவரசி தம்பதி. இவர்களது ஏழு வயது மகன் ஹரிஷ், இந்த தொட்டியின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான்.
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் நேற்று (மே 30) பெய்த மழையால் குழி முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதையறியாத சிறுவன் குழியில் விழுந்துள்ளான். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.