கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு டஃப் கொடுத்த இந்தியர்கள் - முன்னாள் வீரர் உருக்கம்!

author img

By

Published : Dec 30, 2022, 10:32 PM IST

பீலெ

கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கடந்த 1977ஆம் ஆண்டு பீலே, இந்தியா வந்த போது நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை இந்திய முன்னாள் கால்பந்து வீரர் முகமது அக்பர் நம் ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார்.

கொல்கத்தா: புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பெருங்குடல் பகுதியில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் கரோனா பாதித்து சுவாச பிரச்னைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி பீலே இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

இந்நிலையில், கடந்த 1977ஆம் ஆண்டு நட்புறவு கால்பந்து ஆட்டத்தில் விளையாட பீலே இந்தியா வந்த போது நிகழ்ந்த சுவாரஸ்யமான தகவல்களை இந்திய முன்னாள் கால்பந்து வீரம், கொல்கத்தா மைதானத்தின் 'சோட்டே மியான்' என்று பிரபலமாக அழைக்கப்படும் முகமது அக்பர் மனம் திறந்துள்ளார்.

அவர் கூறியதாவது, "நான், சுனி கோஸ்வாமி, சுப்ரதா பட்டாச்சார்யா உள்ளிட்ட பலர் மோகன் பகான் அணியின் முக்கிய வீரர்களாக இருந்த நேரம் அது. ஒரு கண்காட்சி போட்டியில் பீலேவுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

நியூயார்க் நகரை சேர்ந்த காஸ்மோஸ்(Cosmos) என்ற கிளப்புக்காக பீலே விளையாடினார். 24 செப்டம்பர் 1977 அன்று, நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாட பீலே தலைமையிலான வீரர்கள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு வந்தனர். அது ஒரு வார்ம்-அப் போட்டியாக இருந்தாலும், உலகின் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு எதிராக, நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால், போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கன மழை கொட்டித் தீர்த்தது. அதிகப்படியான மழை காரணமாக ஈடன் கார்டன் மைதானம் சேறும் சகதியுமாக இருந்தது. ஆடுகளத்தின் நிலையைப் பார்த்து காஸ்மோஸ் அதிகாரிகள் பதுங்கினர்.

மழையால் முற்றிலும் தோய்ந்து போன மைதானத்தில் வீரர்களை விளையாட வைப்பது பெரிய ஆபத்து என காஸ்மோஸ் கிளப் அதிகாரிகள் பின்வாங்கினர். நாங்கள் அவர்களை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருந்த நிலையில், பொன்னான வாய்ப்பை இழந்ததால் வருந்தினோம்.

இறுதியில் மோகன் பாகன் அணியின் அப்போதைய செயலர் திரன் டே, கிராண்ட் ஹோட்டலுக்குs சென்று காஸ்மோஸ் கிளப் நிர்வாகத்தை வற்புறுத்தி ஆட்டத்திற்கு சம்மதிக்க வைத்தார். அவரது வேண்டுகோளின் பெயரில் பீலே இறுதியாக களம் கண்டார்.

காஸ்மோஸ் அணியில் கார்லோஸ் ஆல்பர்டோ, ஃபிராங்க் பெக்கன்பவுர், ஜுவான் கான்டிலியா மற்றும் ஜியோர்ஜியோ சைனாக்லியாவில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அங்கம் வகித்தனர். அதேநேரம் இந்தியாவில் மோகன் பாகன் அணி பலம் வாய்ந்த அணியாகத் திகழ்ந்து வந்தது.

1977 மோகன் பாகன்  - காஸ்மோஸ் நட்புறவு கால்பந்து ஆட்டம்
1977 மோகன் பாகன் - காஸ்மோஸ் நட்புறவு கால்பந்து ஆட்டம்

ஆட்டத்தில் 17-வது நிமிடத்திலே காஸ்மோஸ் அணியினர் கோல் திருப்பிய நிலையில் மோகன் பாகன் தரப்பிலும் பதில் கோல் திருப்பப்பட்டது. மைதானத்தில் ஏறத்தாழ 80 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருந்த நிலையில், அன்று அனைவருக்கும் கொண்டாட்டமாக அமைந்தது. ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

நானும் எனது சகோதரர் ஹபீப் உள்ளிட்டோரும் பீலேவுக்கு எதிராக கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். நட்புறவு ஆட்டமாக கருதப்பட்டாலும் சிறந்த காஸ்மோஸ் அணி மற்றும் பீலேவுக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்று முகமது அக்பர் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பீலே 2-வது முறையாக இந்தியா வந்து 17 வயதுக்குட்பட்டோருக்கான சுப்ரதோ கோப்பை கால்பந்து தொடரில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.