ETV Bharat / bharat

கர்நாடகாவில் முக கவசம் கட்டாயம் - நியூ இயர் பார்ட்டிகளுக்கு கெடுபிடி!

author img

By

Published : Dec 26, 2022, 5:32 PM IST

Updated : Dec 27, 2022, 2:38 PM IST

மாஸ்க்
மாஸ்க்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது வெளியில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ள கர்நாடக சுகாதாரத்துறை, நியூ இயர் பார்ட்டிகளுக்கு கெடுபிடி காட்டி உள்ளது.

பெங்களூரு: அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனத் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வரலாறு காணாத அளவில் பரவல் அதிகரித்து வருவதாகவும், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா பாதித்தவர்கள் மற்றும் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் குறித்த உண்மைத் தகவல்களை வெளியிடாமல் ராணுவ ரகசியம் போல் சீனா காத்து உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவில் பி.எப்.7 ஒமைக்ரான் மாறுபாடு கரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில், இந்தியாவில் குஜராத், ஒடிசா மாநிலங்களில் அந்த வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தனி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகைகளால் பரவல் விகிதம் அதிகரிக்காமல் இருக்க பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், உயிர் காக்கும் கருவிகள், உள்ளிட்ட மருந்துப் பொருட்களை போதிய அளவில் கையிருப்பு வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பொது வெளியில் மக்கள் கரோனா தடுப்பு அம்சங்களை சரியாக கடைப்பிடிக்கின்றனரா என கண்காணிக்கவும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில், பொது வெளியில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "உணவகங்கள், பப்கள், கேளிக்கை விடுதிகள், தியேட்டர், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், "பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் பொது வெளியில் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேநேரம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம்.

புது வருடத்தை முன்னிட்டு பப் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக உத்தரவுகள் போடப்பட்டு உள்ளதாகவும், கரோனா விதிகளை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

மேலும், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறிய மற்றொரு அமைச்சர் அசோக், மற்ற இடங்களில் மக்கள் தன் விருப்பத்திற்கு ஏற்ப முக கவசம் அணியலாம் என்றும், பொது வெளியில் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புது வருடக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!

Last Updated :Dec 27, 2022, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.