டெல்லியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினாரக பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்வில் அவர் பேசுகையில், " நாட்டில் அனைவருக்கும் மேம்பட்ட சுகாதாரம் அளிப்பதற்கு, அத்துறைக்காக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதுவே சுகாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறுவதற்கான முதல்படியாகும். நாட்டில் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. அதை நிரப்ப அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் அலகின்படி 300 நபர்களுக்கு ஒரு செவிலி இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் 670 நபர்களுக்குத்தான் ஒரு செவிலி இருக்கிறார்.
கிராமப்புறங்களில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிபுரிவதற்கு ஊக்கமளிக்கும் விதமாக அவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். இனிவரும் ஆண்டுகளில் மாநிலங்கள் தங்கள் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு எட்டு விழுக்காட்டிற்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சர்வதேச அளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடான இந்தியா, தனது சுகாதாரக் கட்டமைப்பிற்கு பலமான அஸ்திவாரம் அமைக்க வேண்டிய தருணமிது" என்றார்.
இதையும் படிங்க: கேரள பாஜக தலைவராகிறார் நடிகர் சுரேஷ் கோபி?