ETV Bharat / bharat

வீரப்பனின் கூட்டாளி ஞானப்பிரகாசம் காலமானார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 10:58 AM IST

Veerappan Associate Gnanprakasam Died
வீரப்பனின் கூட்டாளி ஞானப்பிரகாசம் மரணம்

Veerappan Associate Gnanprakasam Died: பாலாறு குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியும், வீரப்பனின் கூட்டாளியுமான ஞானப்பிரகாசம் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் நேற்று (டிச.15) மரணமடைந்தார்.

சாமராஜநகர்: வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டு 1993ஆம் ஆண்டு பாலாறு வனப்பகுதியில் குண்டு வெடிப்பை நடத்தினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 22 போலீசார் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் வீரப்பன் உள்ளிட்ட 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை வழங்கப்பட்ட வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரில் ஒருவர்தான் கர்நாடக மாநிலம் ஹனூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஞானப்பிரகாசம், கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், ஞானப்பிரகாசத்தின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஞானப்பிரகாசம் (69) சுமார் 29 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார்.

மேலும் அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஞானப்பிரகாசத்திற்கு, உச்ச நீதிமன்றம் டிசம்பர் 20, 2022ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து சாமராஜநகர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ஞானப்பிரகாசம் மைசூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இதை அடுத்து, ஞானப்பிரகாசம் கர்நாடக மாநிலம் ஹனூர் தாலுகாவில் உள்ள சந்தனபால்யா என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஞானப்பிரகாசம், கடந்த சில நாட்களாகவே மிகுந்த அவதிக்கு உள்ளானார். இந்த நிலையில், நேற்று (டிச.15) புற்றுநோயின் காரணமாக ஞானப்பிரகாசம் காலமானார்.

மேலும் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சைமன் அந்தோனியப்பா, பில்வேந்திரன் மற்றும் மீசை மாதையன் ஆகியோர் ஏற்கனவே மரணித்த நிலையில், 2004ஆம் ஆண்டில் நடந்த என்கவுண்டரில் வீரப்பனும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாறு குண்டுவெடிப்பு வழக்கு: பாலாறு மகாதேஷ்வர் மலையை ஒட்டிய கிராமத்தைச் சுற்றி, சுமார் 50 கி.மீ பரப்பளவை வீரப்பன் ஆக்கிரமித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 9, 1993 அன்று, அப்போதைய தமிழ்நாட்டின் சிறப்பு அதிரடிப்படை (STF - Special Task Force) தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணா மற்றும் அவரது குழுவினர் வீரப்பனின் கூட்டாளிகளால் தாக்கத் திட்டமிடப்பட்டனர்.

அதன்படி, ஏராளமான வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த வீரப்பன் கூட்டாளிகள் பாலாறு, சொர்கைப்பட்டி அருகே கண்ணிவெடியைப் புதைத்ததாகவும் கோபாலகிருஷ்ணா உள்ளிட்ட தனிப்படையினர் தமிழக எல்லையில் உள்ள பாலாற்றுக்குச் சென்றிருந்த நேரத்தில், வீரப்பனின் கூட்டாளி சைமன் அந்தோனியப்பா வெடிக்கச் செய்த கண்ணிவெடியால் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வீரப்பன் உள்பட 124 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாலாறு குண்டுவெடிப்பு சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 124 பேரில் ஞானப்பிரகாசம், சைமன் அந்தோனியப்பா, மீசை மாதையன் மற்றும் பில்வேந்திரன் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதில் 117 பேர் விடுவிக்கப்பட்டனர், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மைசூர் மத்திய சிறையில் இருந்த நால்வருக்கும், 2004ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை அடுத்து, பெல்காமில் உள்ள ஹிண்டலகா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும் கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து, அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.