ETV Bharat / bharat

Coromandel Express : மூன்று ரயில்கள் விபத்துக்கு இதுதான் காரணமா? விசாரணை அறிக்கை தாக்கல்!

author img

By

Published : Jun 3, 2023, 9:35 PM IST

Coromandel
Coromandel

ஒடிசா மூன்று ரயில் விபத்து சம்பவத்தில், விபத்து ஏற்படுவதற்கு சில விநாடிகளுக்கு முன் 128 கிலோ மீட்டர் வேகத்தில் கோரமண்டல் ரயில் சென்றதாக விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

டெல்லி : ஒடிசா ரயில் விபத்தில் விபத்து நேரிடுவதற்கு சில விநாடிகளுக்கு முன் பக்க இணைப்பு பாதையில் கோரமண்டல் விரைவு ரயில் 128 கிலோ மீட்டர் வேகத்திலும், பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் 116 கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றதாக விசாரணைக் குழு, ரயில்வே வாரியத்திடம் தாக்கல் செய்த முதல் கட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உள்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது, இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்த பிரதமர் மோடி விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள், விபத்துக்கான காரணம், சீரமைப்பு பணிகள், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விபத்துக்குள்ளான சென்னை கோரமண்டல் விரைவு ரயிலில், ஆயிரத்து 257 முன்பதிவு செய்த பயணிகளும், யஷ்வந்த்பூர் விரைவு ரயிலில் ஆயிரத்து 39 முன்பதிவு பயணிகளும் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில், சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது நிர்வாக கோளாறு காரணமாக நிகழ்ந்ததா என குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஆய்வுக் குழு ரயில்வே வாரியத்திடம் சமர்பித்து உள்ளது. அந்த அறிக்கையில், விபத்து நேரிடுவதற்கு சில விநாடிகளுக்கு முன், கோரமண்டல் விரைவு ரயில் 128 கிலோ மீட்டர் வேகத்திலும், பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் 116 கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பக்க இணைப்பு பாதையில் சென்ற கோரமண்டல் ரயில், பாஹநகர் பஜார் நிலையம் அருகே அதே தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இதில் மோதிய வேகத்தில் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த தண்டவாளத்தில் 116 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் பக்க இணைப்பு பாதையில் கோரமண்டல் ரயில் எவ்வாறு நுழைந்தது, சிக்னல் அமைப்பில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா என விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Odisha train Accident : இயந்திரக் கோளாறா? மனிதத் தவறா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.