ETV Bharat / bharat

பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் தான் நாட்டின் முன்னேற்றம் உள்ளது...!

author img

By

Published : Jan 27, 2021, 7:53 AM IST

girl child's development
girl child's development

ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கு 950 பெண்கள் என்பது ஆரோக்கியமான விகிதமாக இருந்தாலும், இந்தியா அதை அடைவதற்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது. கோவிட்-19 காலகட்டத்தின் போது நடந்த ஏராளமான குழந்தை திருமணங்கள் உண்மையிலேயே இதயத்தை பிளக்கிறது. பெண் குழந்தைகளின் வளர்ச்சி உறுதியாகும் சூழலில் மட்டுமே தேசம் நம்பிக்கையுடன் முன்னேற முடியும்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் என்று 2012ஆம் ஆண்டு ஐநா சபை அறிவித்தது. அதற்கு முன்னர், இந்தியாவில் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக 2009இல் இருந்து அனுசரிக்கப்படுகிறது. இருந்தாலும், பாலின பாகுபாடு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பெண் குழந்தைக்கு எதிரான பாகுபாடுகள் இந்தியாவில் மிகவும் அதிகம். கருவுற்ற தாய்மார்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதன்படி தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. பெண் கருக்கள் இரக்கமின்றி அழிக்கப்படுகின்றன. குடும்பத்தினரால் சுமையாக கருதப்படும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இவ்வாறு பெண் குழந்தைக்கு அளிக்கப்படும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு முடிவே இல்லை.

1961ஆம் ஆண்டில், ஆறு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 1000 சிறுவர்களுக்கும் 976 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த விகிதம் 2001ஆம் ஆண்டுக்குள் 927ஆகவும், 2011இல் 918ஆகவும் சரிந்தது. பெண் குழந்தை மீதான சமூகத்தின் பாரபட்சமான அணுகுமுறை எவ்வாறு ஆபத்தானது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. பெண் குழந்தையை காப்பாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2015இல் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் காரணமாக, இந்த விகிதம் 16 புள்ளிகள் அதிகரித்து 934ஆக உயர்ந்துள்ளது. தேசிய பெண் குழந்தை தினத்தையொட்டி, நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கு 950 பெண்கள் என்பது ஆரோக்கியமான விகிதமாக இருந்தாலும், இந்தியா அதை அடைவதற்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது. கோவிட்-19 காலகட்டத்தின் போது நடந்த ஏராளமான குழந்தை திருமணங்கள் உண்மையிலேயே இதயத்தை பிளக்கிறது. பெண் குழந்தைகளின் வளர்ச்சி உறுதியாகும் சூழலில் மட்டுமே தேசம் நம்பிக்கையுடன் முன்னேற முடியும்.

1995ஆம் ஆண்டு பெய்ஜிங் தீர்மானத்தின் தொடர்ச்சியாக, ஐநா சபை 2011இல் நிறைவேற்றிய தீர்மானத்தில், பெண் குழந்தைகள் கல்வி, ஆரோக்கியம் பெறுவதற்கான உரிமை உண்டு என்று கூறியது கவனிக்கத்தக்கது. ஷஃபாலி வர்மா, மிதிலி தாக்கூர், பிரியங்கா பால், ஹிமா தாஸ், சிவாங்கி பதக், ரிதிமா பாண்டே போன்றவர்களின் வெற்றிக் கதைகள் நம்பிக்கையை தரும் வேளையில், உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை இந்தியாவில் கருவுற்ற ஒவ்வொரு இரண்டு பெண்களில் ஒருவர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. சிஆர்ஒய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், இந்தியாவில் கிராமப்புறங்களில் நடைபெறும் திருமணங்களில் 57 விழுக்காடு பெண்கள், 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும். அந்த ஆண்டில் நாட்டில் 72 லட்சம் குழந்தை திருமணங்கள் நடந்ததாகவும் அந்த அமைப்பு கடந்த ஆண்டு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

நாட்டில் ஏழு மாநிலங்களில் வீட்டல் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாக புகார் அளித்துள்ளதாகவும், எட்டு மாநிலங்களில் பாலின விகிதம் குறைந்துள்ளதாகவும், ஒன்பது மாநிலங்களில் பெண்கள், தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாக கூறியதாகவும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. அதன் முடிவுகள் கள நிலவரம் குறித்த உண்மையை உணர்த்துகிறது. பெண் குழந்தைக்கு 12 வருட காலம் தடையற்ற கல்வியை அளிக்கும் கொள்கைகளை சர்வதேச நாடுகள் வகுக்க வேண்டும் என்று உலக வங்கி பரிந்துரை செய்திருந்தது.

இந்த விவகாரங்களில் பின்தங்கியுள்ள நாடுகள் ஆண்டுக்கு 15 முதல் 30 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுகு உற்பத்தித்திறனை இழந்து வருவதாக 2018ஆம் ஆண்டில் உலக வங்கி எச்சரித்திருந்தது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியமான வளர்ச்சி, கல்வி, குழந்தை திருமண ஒழிப்பு மற்றும் பெண் சிசுகொலை தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உறுதி செய்யும் கொள்கைகளை நாட்டில் செயல்படுத்தும் போது வளர்ச்சி விகிதம் உயரும் என்றால் அது மிகையல்ல.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.