பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், தக்தாபூரை சேர்ந்தவர் பவன் சிங் தாகூர். சதி சாஹூ என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். உஸ்லாபூரில் உள்ள கீதாஞ்சலி நகரில் மனைவியுடன் வாடகை வீட்டில் பவன் வசித்து வந்தார்.
இந்நிலையில் மனைவியை அவர் கொடூரமாக கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டியது தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கள்ளநோட்டு தயாரிப்பு: புகைப்படக் கலைஞரான பவன் சிங், கள்ள நோட்டுக்களை அச்சடிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பவனின் வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்ட போலீசார், அங்கு சென்றனர். அப்போது ஏராளமான கள்ள நோட்டுக்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் கணினி, பிரின்டிங் இயந்திரம், அச்சடிக்க பயன்படும் மை ஆகியவற்றை கைப்பற்றினர்.
காத்திருந்த அதிர்ச்சி: இந்நிலையில் வீட்டுக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் காலியான பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி இருந்தது. அதில் ஏதோ சில பொருட்கள் பாலித்தீன் பைகளால் மூடப்பட்டிருந்தன. போலீசார் அதை திறந்து பார்த்த போது கடும் துர்நாற்றம் வீசியது. கள்ள நோட்டுக்கள் தான் இருக்கும் என போலீசார் கருதிய நிலையில், அதில் மனித உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பவனிடம்போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது அவரது மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 மாதங்களுக்கு முன்பே கொலை: பவன்-சதி சாஹூ தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளை சொந்த கிராமத்தில் விட்டுவிட்டு, தம்பதியர் மட்டும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஏற்கனவே சதியின் நடத்தையில் பவனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கள்ள நோட்டு அச்சடிப்பதை சதி கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனவரி 6-ம் தேதி தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பவன், மனைவி சதியை கொலை செய்துள்ளார். மேலும் டைல் கட்டர் மூலம் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் வைத்துள்ளார். ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததால், உடல் பாகங்களை வெளியே எடுத்துச்செல்ல முடியவில்லை என விசாரணையில் பவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பவன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மணீஷ் சிசோடியாவுக்கு வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்