ETV Bharat / bharat

காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து சர்ச்சை கருத்து - நடிகை சாய் பல்லவியின் மனு தள்ளுபடி!

author img

By

Published : Jul 8, 2022, 7:42 PM IST

Sai
Sai

காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி நடிகை சாய் பல்லவி தாக்கல் செய்த மனுவை தெலங்கானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹைதராபாத்: ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் "விரத பர்வம்" என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தின் புரோமோஷனுக்காக தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை சாய் பல்லவி, "காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை" எனக் கூறினார். அவரது இந்த கருத்து பேசு பொருளானது.

இது தொடர்பாக தெலங்கானாவைச் சேர்ந்த பஜரங் தள் நிர்வாகி அகில் என்பவர், சுல்தான்பஜார் போலீசில் புகார் அளித்திருந்தார். சாய் பல்லவியின் கருத்து மத மோதலை தூண்டும் வகையில் இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி சாய் பல்லவிக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து சாய் பல்லவி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாய்பல்லவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாய்பல்லவி மனிதாபிமான அடிப்படையிலேயே அந்த கருத்தை தெரிவித்தார் என கூறினார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, முதற்கட்ட விசாரணைக்காகவே அழைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். இதை பதிவு செய்த நீதிமன்றம், சாய்பல்லவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: மத மோதல் குறித்து அச்சமின்றி பேசிய சாய் பல்லவி... சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய விவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.