ETV Bharat / bharat

"மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும்" - இந்தி குறித்த தயாநிதி மாறனின் வைரல் வீடியோவுக்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 10:39 PM IST

Updated : Dec 25, 2023, 9:34 AM IST

ஹிந்தி குறித்து எம்பி தயாநிதி மாறனின் சர்ச்சை கருத்துக்கு துணை முதலமைச்சர் தேஜஸ்வி கண்டனம்
ஹிந்தி குறித்து எம்பி தயாநிதி மாறனின் சர்ச்சை கருத்துக்கு துணை முதலமைச்சர் தேஜஸ்வி கண்டனம்

Tejashwi Yadav: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இந்தி குறித்து 4 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகும் நிலையில், இந்த விவகாரத்தில் அவரது பேச்சுக்கு பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாட்னா: திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது இந்தி குறித்துப் சர்ச்சைக்குரிய வகையில் அவர் கூறிய கருத்தை தற்போது பாஜகவினர் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், "உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் இந்தி மொழியை மட்டும் படிப்பவர்கள் பிழைப்பதற்காகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்து சாலை அமைத்தல், கட்டடத்தொழில், கழிவறை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், ஆங்கிலம் கற்றவர்கள் கைநிறைய ஊதியத்துடன் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகின்றனர்” எனப் பேசி இருந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவை தற்போது பாஜகவினர் மீண்டும் வைரல் செய்து 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், எம்.பி தயாநிதி மாறனின் கருத்துக்குப் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து எம்.பி தயாநிதி மாறனின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தல்ல. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி எப்படி சமூக நீதியைப் பின்பற்றுகிறதோ, அதேபோல் எங்களது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் சமூக நீதியைப் பின்பற்றும் கட்சியாகும்.

இந்த நாட்டில் மக்கள் எங்குச் சென்றும் வேலை பார்ப்பதற்கான சுதந்திரம் உள்ளது என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும். மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும். அந்த வகையில் நாங்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மரியாதை கொடுத்து வருகிறோம்.

இந்த விவாதத்தில், சாதிய கோட்பாட்டின் கீழ் குறிப்பிட்ட சில மக்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்க்கும் வகையில் பேசியிருந்தால் அது சரியானதாக அமைந்திருக்கும். ஆனால் அவர் மேடையில் பதிவு செய்த கருத்து, உத்தர பிரதேசம் மற்றும் பீகாரின் ஒட்டுமொத்த மக்களின் மொழி உணர்வைக் கேலி செய்யும் விதத்தில் இழிவாகப் பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது.எங்கள் மக்களின் தேவை பிற மாநிலங்களில் அதிகமாக உள்ளது. எங்கள் மக்கள் மற்ற மாநிலங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபடவில்லை என்றால் அம்மாநிலங்களில் செயல்படும் தொழில்கள் ஸ்தம்பித்துவிடும்" என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு போன்று சர்ச்சை வரிசையில் தற்போது எம்பி தயாநிதி மாறனின் இந்தக் கருத்தும் இந்திய அரசியலில் விஸ்வரூபம் கண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் திமுக மற்றும் RJD-க்கும் இடையேயான மனக்கசப்பு சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 3500 வீடுகள், 175 சாலைகள் சேதம்; ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளர் தகவல்!

Last Updated :Dec 25, 2023, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.