தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

author img

By

Published : May 11, 2022, 7:41 PM IST

Supreme Court

தேச துரோக வழக்குப் பதிய, மத்திய- மாநில அரசுகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேச துரோக சட்டத்தின் 124ஏ சட்டப்பிரிவுக்கு எதிராக அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த 2021ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்த தேச துரோக சட்டம் தேவையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது. இதற்குப் பதிலளித்த மத்திய அரசு, தேச விரோத செயல் என அடையாளம் காணக்கூடிய நடவடிக்கைகளுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதியாமல் இருக்க முடியாது, அதனால் இந்தச் சட்டப்பிரிவு தொடர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று (மே 11) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேச துரோக சட்டத்தை மறுபரீசிலனை செய்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், 124ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் வரை, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச துரோக சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை மீறி தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தச் சட்டப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இச்சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றங்கள் மூலம் ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஸ்வானி குமார் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “புதிய தேசத்துரோக வழக்கு பதியக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு” எனக் கூறினார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் இரவு 10 - காலை 6 மணி வரை ஒலிபெருக்கி உபயோகப்படுத்த தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.